பீகார் சட்டசபை தேர்தல்... தொகுதி உடன்பாட்டில் சிக்கல்... அமித் ஷாவுக்கு சிராக் பஸ்வான் கடிதம்!!
பாட்னா: பீகார் மாநிலம் எதிர்கொண்டு இருக்கும் தேர்தலில் இன்னும் எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி, எவ்வளவு தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முடிவாகவில்லை. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தொகுதி உடன்பாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் அக்டோபர் 28ஆம் தேதி துவங்குகிறது. மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்து இருந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.
பீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள்
லோக் ஜனசக்தி
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இன்னும் தேர்தல் சூடுபிடிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடையே இன்னும் தொகுதிகள் பிரிப்பதில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் கடிதம் எழுதி இருக்கிறார்.
மோடி
அமித் ஷாவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தின் நகலை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் கேபி நட்டா ஆகியோருக்கும் சிராக் அனுப்பி உள்ளார். சமீபத்தில் பாட்னா வந்திருந்த ஜேபி நட்டா நிதிஷ் குமாரை மட்டும் சந்தித்து இருந்தார்.
மோதல்
கடந்த சில மாதங்களாகவே தொகுதிகள் பிரிப்பதில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இடையே சச்சரவு நீடித்து வருகிறது. சிராக் அதிக தொகுதிகளை கேட்பதால் இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. ஆனால், விட்டுக் கொடுக்க நிதிஷ் தயாராக இல்லை. அதிக இடங்களில் போட்டியிட்டால்தான், இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று நிதிஷின் திட்டமாக இருக்கிறது. இதனால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.
வேட்பாளர்
தொகுதிகளை பங்கிடுவதில் சிக்கல் நீடித்தால், தனித்து போட்டியிடுவதற்கும் தயங்க மாட்டோம். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை லோக் ஜனசக்தி நிறுத்தும் என்று சிராக் ஏற்கனவே அறிவித்து இருந்தார். பிரதமர் மோடியை பாராட்டி வரும் சிராக், தொடர்ந்து நிதிஷ் குமாரை மாநிலத்தில் எதிர்த்து வருகிறார்.
மகன் முடிவு
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி இருக்கிறது. மத்திய உணவுத்துறை அமைச்சராக சிராக்கின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் இருக்கிறார். இவர்தான் லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் மகனின் முடிவுதான் தன்னுடையது என்று ஏற்கனவே ராம் விலாஸ் பஸ்வானும் அறிவித்து இருந்தார்.