தேஜஸ்வி அதிரடியையும் தாண்டி.. நச்சுன்னு நங்கூரம் பாய்ச்சிய நிதீஷ் குமார்.. இதுதாங்க காரணம்!
பாட்னா: பீகாரில் தேஜஸ்வி யாதவ் எழுச்சி பெற்ற நிலையிலும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக பீகார் சட்டசபை தேர்தல் நடந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நிகழ்ந்தது. இதில் மீண்டும் பாஜக- ஜேடியூ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் கருத்துக் கணிப்புகளும் ஆர்ஜேடிக்கு நல்ல எதிர்காலம் என கணக்கிட்டன. ஆனால் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது.
கூட்டணி
முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடுமையான எதிர்ப்பைக் கூறி பீகாரில் தனித்து போட்டியிடுவது என எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் முடிவு செய்திருந்தார். அப்போது பாஜக- ஜேடியூ தலைமை ஆர்ஜேடி-காங். முகாமில் இருந்து இரண்டு தலைவர்களை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தது.
ஆச்சரியம்
ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவின் தலைவர் ஜித்தன் ராம் மஞ்ஜி மற்றும் விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி ஆகியோரைத்தான் வளைத்தது ஜேடியூ-பாஜக. நிதிஷ் கூட்டணியின் இந்த முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த கட்சிகளுக்கும் வாக்கு சேகரித்தார்.
நிதிஷுக்கு கை கொடுத்தது
காங்.முகாமில் இருந்து அழைத்துவரப்பட்ட மஞ்ஜியும் முகேஷும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். மஞ்ஜியின் கட்சிக்கு ஜேடியூ இடத்தை பிரித்து கொடுத்தது. அதே போல் பாஜக சஹானியின் கட்சிக்கு இடங்களை பிரித்தது. முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நிதிஷ்குமார் முக்கியத்துவம் கொடுத்ததும் நிதிஷுக்கு கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
கொரோனா
கடந்த ஆகஸ்ட்டில் ஆர்ஜேடியிலிருந்து ஜேடியூவில் இணைந்த ஃபராஸ் ஃபட்மிக்கு நிதிஷ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். இதில் ஃபட்மி தோற்றாலும் நிதிஷ் குமாரின் நடவடிக்கை முஸ்லீம் வாக்காளர்களை சென்றடைந்தது. அது போல் புருணியாவில் நிதிஷ்குமார் பேசிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சு பெண் வாக்காளர்களை கவர்ந்தது. கொரோனா நேரத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடியும்- நிதிஷும் நிதியுதவி செய்தனர்.
பீகார் தேர்தல்
திடீரென அமல்படுத்தப்பட்ட கொரோனா லாக்டவுனால் மோடி அரசு மீது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கோபம் இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கியது ஆகியவற்றால் புலம் பெயர்ந்தோர் மகிழ்ச்சி அடைந்தனர். பீகார் தேர்தல் பல முதல்வர் வேட்பாளர்களை சந்தித்துவிட்டது.
நிதிஷுக்கு வெற்றி கிடைத்தது எப்படி
எனினும் நிதிஷ்குமாருக்கும் தேஜஸ்வி யாதவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அது போல் உபேந்திரா குஷ்வானா, ராஜீவ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், புஷ்பம் பிரியா ஆகியோரும் முதல்வர் வேட்பாளர்களாக தங்களை முன்னிறுத்தி கொண்டனர். எனினும் நிதிஷ்குமாருக்கு பலர் வாக்களிக்க நேரிட்டது. லாலு, ராப்ரி தேவி குறித்து தனது பிரசாரங்களில் தேஜஸ்வி முன்னெடுக்கவில்லை. ஆனால் நிதிஷ்குமார் தனது பிரச்சாரங்களில் லாலுவின் காட்டாட்சி குறித்து முன்வைக்காத நாளே இல்லை. இது போன்ற ஏராளமான விஷயங்களால் நிதிஷ்குமாருக்கு கணிசமான வெற்றி கிட்டியது.