"பேராபத்து.. நாடு உள்நாட்டு போரை நோக்கி செல்கிறது.. காரணம் பாஜக தான்!" விளாசும் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு யாதவ் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இடையேயான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. என்ன தான் கூட்டணி என்றாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே சிறுசிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
6 மொழிகளை பேசுவேன்.. குடும்ப கஷ்டத்துக்கு ஸ்விக்கியில் வேலை.. போலீஸால் தாக்கப்பட்ட ஊழியர் கண்ணீர்
பூசல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் நிதிஷ்குமார் தான் பாஜகவை மட்டும் நம்பி இல்லை என்பதைக் காட்டும் நடவடிக்கையில் இறங்குவார். சமீபத்தில் அவர் எதிர்க்கட்சியின் தேஜஸ்வி யாதவ் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டிருந்தார்.
லாலு பிரசாத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தியா இப்போது உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சாடி உள்ள அவர், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பீகார் முன்னாள் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் போர்
சம்பூர்ண கிராந்தி திவாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லாலு பிரசாத் யாதவ், "பாஜக செயல்படும் விதத்தில் பார்க்கும்போது, நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று நான் நாட்டு மக்களை அழைக்கிறேன். இப்போது நாம் ஒற்றுமையாகப் போராட வேண்டும், அப்போது தான் வெற்றி பெற முடியும்" என்றார்.
போராடவேண்டும்
மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அரசுக்கு தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக எப்படி நடவடிக்கை எடுத்தாலும் சரி, ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
Recommended Video
குற்றவாளி
கடந்த பிப்ரவரியில், ராஞ்சியில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக டோராண்டா கருவூலத்தில் இருந்து மோசடி செய்ததற்காக லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், டோராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.