மத்தியப்பிரதேசத்தில் ஒரு நாள் இரவில் லட்சாதிபதியான தொழிலாளி!!
பன்னா: மத்தியப்பிரதேச மாநிலம் பன்னாவில் சுரங்கம் வெட்டும்போது தொழிலாளி ஒருவருக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான மூன்று வைரங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒரே நாளில் அவர் லட்சாதிபதியானார்.
இதுகுறித்து பன்னா மாவட்ட வைர அதிகாரி ஆர்கே பாண்டே கூறுகையில், ''சுபல் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் தோண்டியுள்ளார். அப்போது அவருக்கு மூன்று வைரங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் மொத்த எடை 7.5 காரட் ஆக இருந்தது. இந்த வைரங்களின் மதிப்பீடு ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக இருக்கலாம். மாவட்ட வைர அலுவலகத்தில் அந்த வைரங்களை டெபாசிட் செய்துள்ளார். அந்த வைரங்கள் ஏலம் விட்ட பின்னர் அதற்குரிய பணம் அவரிடம் அளிக்கப்படும்'' என்றார்.

இந்த வைரங்கள் கிடைத்ததன் மூலம் ஒரே நாள் இரவில் சுபல் பணக்காரர் ஆகி இருக்கிறார். இந்த வைரங்களின் மீது 12 சதவீத வரி விதிக்கப்படும். இது பிடித்தம் போக மீதம் இருக்கும் 88 சதவீத பணம் அவரது கையில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே பன்னாவில் மேலும் ஒரு தொழிலாளிக்கு 10.69 காரட் எடையிலான வைரம் கிடைத்துள்ளது. உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று பன்னா. ஆனால், இந்த இடம் மிகவும் பின் தங்கிய இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications