பாஜகவுக்கு இன்ப அதிர்ச்சி.. முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள சீமாஞ்சலில் முன்னிலை.. காரணம் தெரியுமா?
பாட்னா: முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பீகாரின் சீமாஞ்சல் பகுதியிலும், பாஜக மற்றும் ஜேடியூ கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
Recommended Video
சீமாஞ்சல் பகுதி என்பது நான்கு மாவட்டங்களில் (அரேரியா, பூர்னியா, கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார்) பரவியுள்ள பிராந்தியத்தை குறிக்கிறது. இங்கு, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
சீமாஞ்சல் பகுதியில் 24 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 24 தொகுதிகளில், 8 சட்டசபை தொகுதிகளில் முஸ்லீம் மக்கள் தொகை மிக அதிகம். அதாவது 60% முதல் 75% வரை உள்ளது. ஐந்து தொகுதிகளில் 40% - 60% முஸ்லீம் வாக்குகள் உள்ளன. 8 தொகுதிகளில், 25% முதல் 40% வரை முஸ்லீம்கள் ஓட்டு உள்ளது.

சீமாஞ்சல் முக்கியம்
ஒட்டுமொத்தமாக, அரேரியாவில் 43%, பூர்னியா 38.5%, கிஷன்கஞ்ச் 68%, கதிஹார் 44.5% முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ளன. பீகார் மாநிலம் முழுவதும் முஸ்லீம் சமூகத்தின் மொத்த மக்கள் தொகை 16.9% ஆக உள்ளது. அதில் சீமாஞ்சல் பகுதியில்தான் பெருமளவுக்கு ஓட்டுக்கள் உள்ளன.

எக்ஸிட் போல்கள்
முஸ்லீம்கள் இந்த முறை பாஜக கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளதாகவும், 80 சதவீத முஸ்லீம்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் எக்ஸிட் போல்கள் கூறின. ஆனால் இப்போது சீமாஞ்சல் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

சீமாஞ்சல் நிலவரம்
சீமாஞ்சலில், ஜே.டி-யூ தம்தாஹா மற்றும் ரூபாலி தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, அதே நேரத்தில் பாஜக, பூர்னியா, பிரான்பூர், கதிஹார் மற்றும் சிக்தி ஆகிய சட்டசபை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2015 ஆம் ஆண்டில், சீமஞ்சலில், ஜே.டி-யூ 5 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றியது.
இம்முறை அதைவிட அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

ஓவைசி கூட்டணி
அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல்-முஸ்லிமீன் (AIMIM), கட்சி தலைமையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி , ஜந்தந்த்ரிக் கட்சி மற்றும் சமாஜ்வாடி ஜனதா தள ஜனநாயகம் ஆகிய கட்சிகள் இணைந்து பீகாரில் களம் கண்டன. சீமாஞ்சல் பிராந்தியத்தில், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு செல்ல வேண்டிய ஓட்டுக்களை, இந்த கூட்டணி பிரித்துள்ளது. 7 தொகுதிகளில் இந்த கூட்டணி கடுமையான போட்டியை கொடுத்துள்ளது. இதனால் பாஜக -ஜேடியூ கூட்டணிக்கு லாபம் கிட்டியுள்ளது.

பாஜகவுக்கு லாபம்
ஒரு பக்கம் சிராக் பாஸ்வான் கட்சி தனித்துப் போட்டியிட்டதால் ஜேடியூவிற்கு செல்ல வேண்டிய ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டன, இன்னொரு பக்கம், ஓவைசி கட்சியால், எதிர்க்கட்சியின் மெகா கூட்டணிக்கு போக வேண்டிய ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டன. ஆக மொத்தம், அவரவர் எடுத்த முடிவு பாஜகவுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications