மோடியின் செல்வாக்கு சரிகிறது.. 2 ஆண்டுகளில் ஆட்சி கவிழும் ஆபத்து இருக்கு.. பிரசாந்த் கிஷோர் பேச்சு
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஜன் சூராஜ் என்ற தனது அமைப்பை இப்போது அரசியல் கட்சியாக பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸ் வளர்ந்துள்ளது உண்மை தான் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அதேநேரம் பிரதமர் மோடி மற்றும் என்டிஏ அரசின் செல்வாக்கு சரிந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் முக்கியமான தேர்தல் ஆலோசகர்களில் ஒருவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014ல் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றியதில் இவர் புகழ் பெற்றார்.

அதன் பிறகு ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் என்று பல்வேறு மாநிலங்களிலும் இவர் இணைந்து பணியாற்றிய கட்சியே வெற்றி பெற்றது. இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ஆலோசகர் பணிக்கு குட்பை சொல்லிவிட்டு ஜன் சூராஜ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
பிரசாந்த் கிஷோர்: பீகாரில் கடந்த 2 ஆண்டுகளாக ஜன் சூராஜ் சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடந்தன. பாத யாத்திரையும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் தான் அவர் கடந்த அக். 2ம் தேதி இந்த ஜன் சூராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றினார். அடுத்தாண்டு பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதை குறிவைத்தே பிரசாந்த் கிஷோர் இப்போது காய்களை நகர்த்தி வருகிறார்.
சரியும் செல்வாக்கு: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்டிஏ அரசின் செல்வாக்கு சரிந்து வருவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதேநேரம் கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸ் நிலை சற்று மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜான் சுராஜ் 243 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று சொன்ன அவர் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மேலும், அவர் பீகாரில் ஆட்சியில் உள்ள என்டிஏ கூட்டணியையும், காங்கிரஸ்- ஆர்ஜேடி உள்ள எதிர்க்கட்சி கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார்.
பிரசாந்த் கிஷோர் மேலும் பேசுகையில், "மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சி உறுதியாக இல்லை.. மத்திய அரசு எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும் என்பது இன்னும் 2- 2.5 ஆண்டுகளில் தெரிய வரும். இந்த காலகட்டத்தில் பீகார் உட்பட 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை பொறுத்து மத்திய பாஜக ஆட்சி இருக்கிறது. இதில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே மத்தியில் ஆட்சியில் தொடர முடியும்.
தவிக்கும் பாஜக: பீகாரை பொறுத்தவரை பாஜக தலைமை இல்லாமல் தவிக்கிறது. பீகாரில் நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாத நிர்ப்பந்தத்தில் பாஜக தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் மத்தியில் ஆட்சியைத் தக்க வைக்க நிதிஷ் ஆதரவு தேவை. லோக்சபாவில் கடந்த 2014ல் 30 இடங்களையும், 2019ல் 39 இடங்களையும், 2024ல் 30 இடங்களையும் என்டிஏ தரப்பிற்கே மக்கள் கொடுத்தார்கள். ஆனாலும், இங்கு மக்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்?
இப்போது பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. பீகார் அரசு நான்கு ஓய்வுபெற்ற அதிகாரிகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பீகார் மக்கள் என்ன கஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதே நிதஷ்குமாருக்கு தெரிவதில்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications