ஒரே மணிநேரம்தான்.. மதுக்கடைகளை உடனே திறப்பேன்- பீகாரில் பிரசாந்த் கிஷோர் இறக்கும் 'புதுரக' சரக்கு!
பாட்னா: பீகாரில் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், தாம் ஆட்சியைப் பிடித்தால் மாநிலத்தில் ஒரே மணிநேரத்தில் மதுவிலக்கை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து மதுக் கடைகளையும் திறந்துவிடுவேன் என வினோதமான வாக்குறுதியை அளித்துள்ளார். தேர்தல் களங்களில் மதுவிலக்குதான் வாக்குறுதியாக தரப்படும்; பிரசாந்த் கிஷோரோ புதுரகமாக 'மதுக்கடைகளை' திறப்பேன் என்கிறார்.
தேர்தல் வியுக வல்லுநர் என கொண்டாடப்படும் பிரசாந்த் கிஷோர், அக்டோபர் 2-ந் தேதியன்று ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளார். தமது கட்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீகார் தேர்தலில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் உடனடியாக ஒரே மணிநேரத்தில் மதுவிலக்கை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம். பீகாரில் மதுவிலக்கு அமல் என்பது எதனையும் சாதித்துவிடவில்லை.

பீகாரில் மதுவிலக்கு என்பது வீட்டுக்கு வீடு மதுவை சப்ளை செய்யக் கூடியதாக உருமாறிவிட்டது. இதன் மூலம் பீகார் மாநில அரசுக்கான ரூ.20,000 கோடி வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய சட்டவிரோத மதுவிற்பனை மூலம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பெருமளவு ஆதாயம் அடைகின்றனர்.
மதுவிலக்கு என்பதற்கு எதிராக பேசுவதற்கு நான் ஒருபோதும் தயங்கியதும் இல்லை.. வெட்கப்பட்டதும் இல்லை. பெண்களின் வாக்குகள் போய்விடுமே என்பதற்கு எல்லாம் நான் அஞ்சுவதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை வெளிப்படையாகத்தான் பேச வேண்டும். செயல்பட வேண்டும்.
பீகார் முதல்வர்களான மாஜி லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், பாஜக, காங்கிரஸ்தான் இந்த மாநிலம் பின் தங்கி இருப்பதற்கு காரணமானவர்கள். அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளிலும் எங்களது ஜன சுராஜ் கட்சி போட்டியிடும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்தவர் பிரசாந்த் கிஷோர் என நம்பப்படுகிறது. இவரது தேர்தல் வியூகங்களின் அடிப்படையில்தான் மோடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வென்றதாகவும் கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications