வெளியில் துறவி.. கோயிலுக்குள் 'திறவி'.. அதுவும் புத்த கயாவில்.. என்னே ஒரு தைரியம்.. தூக்கிய போலீஸ்
பாட்னா: பீகார் மாநிலத்தில், பிரசித்தி பெற்ற புத்த கயா கோயிலில், ரஷ்ய நாட்டை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த மகாபோதிக் கோயில். புத்த மதத்தின் மரபு வழி கதைகளின்படி துறவியாக அலைந்து திரிந்துக்கொண்டிருந்த கௌதம புத்தர் கி.மு 530 காலகட்டத்தில் இந்தியாவின் தற்போதை பீகாரில் ஓரிடத்தில் தியானத்திற்காக அமர்ந்துள்ளார். தொடர்ந்து மூன்று பகல்கள் மூன்று இரவுகள் இப்படியே தியானத்தில் கழித்த பின்னர் முழு ஞானம் பெற்றுள்ளதை உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் அமர்ந்து தியானம் செய்தது போதி மரத்தின் அடியில்தான். எனவே போதி மரத்தை மையமாக வைத்து கி.பி 5-6 நூற்றாண்டில் இங்கு மகாபோதிக் கோயிலில் கட்டப்பட்டது. இந்த கோயில் உலகம் முழுவதும் உள்ள புத்த துறவிகளின் புனித தலமாகும். எனவே ஆண்டுதோறும் கணிசமான அளவில் வெளிநாட்டு பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் நேற்று ரஷ்ய நாட்டை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு.. பெண் பக்தர் வாக்குவாதம்
ரஷ்ய துறவி
இவர் 'தந்திர சாதனா' எனும் தியானம் மூலம் அமைதியின் ஒரு பெருங்கடலை அனுபவிக்க முயன்று வரும் துறவியாவார். இந்நிலையில் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் இவரின் உடமைகளை சோதனை செய்துள்ளனர். சோதனையில் இவரிடமிருந்து 100 மில்லி அளவிலான மதுபாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 10 மில்லி அளவு விஸ்கி இருந்திருக்கிறது. இது குறித்து போத்கயா டிஎஸ்பி அஜய் பிரசாத் கூறுகையில், "வழக்கமான சோதனை நடைமுறையில் இவர் மாட்டியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள் துறவிகளை மரியாதையாகதான் நடத்துவார்கள்.
சோதனை
எனவே இவர்களிடம் கறாரான சோதனை இருக்காது. ஆனால் ரஷ்ய துறவின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இவரிடம் சோதனை செய்துள்ளர். இவர் முதலில் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் கட்டாய சோதனை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அப்படிதான் மதுவுடன் கூடிய மது பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போல் எத்தனை முறை கோயிலுக்குள் மதுவுடன் அவர் நுழைந்திருக்கிறார் என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கிறது.
மது விலக்கு
இந்த சட்டத்தின்படி மதுபானங்கள் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிப்பதால் அதனை மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மது பானங்களை கடத்துவது, விற்பது, பயன்படுத்துவது போன்ற குற்றத்திற்காக குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ரஷ்ய துறவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும்" என்று கூறியுள்ளார்.
மது விற்பனை
பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக மது விற்பனை மாநிலம் முழுவதும் அமோகமாக நடந்து வருகிறது. இந்த போலி மதுவால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த மது விற்பனை குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.