பலமாக நிற்கும் பாஜக.. சக்கர வியூகத்துடன் களமிறங்கும் "இந்தியா.." மிரள வைக்கும் பெகுசராய் கள நிலவரம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 சீட்கள் இருந்தாலும் அங்குள்ள மிக முக்கிய தொகுதிகளில் ஒன்று பெகுசராய். இந்த பெகுசராய் தொகுதியில் இப்போது கள நிலவரம் என்ன.. யார் வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு அடித்தளமிட்ட மாநிலம் என்றால் அது பீகார் தான். அங்கே தான் பல்வேறு எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடையில் அழைத்து முதல்முறையாக நிதிஷ்குமார் கூட்டம் நடத்தினர்.

அந்த நிதிஷ்குமார் இப்போது இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு வந்துவிட்டார். ஆனாலும், லோக்சபா தேர்தலில் பீகார் முக்கியமான மாநிலம் என்பதில் சந்தேகம் இல்லை.
பெகுசராய்: அப்படி பீகார் மாநிலத்தில் இருக்கும் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று பெகுசராய்.. இதை மினி மாஸ்கோ என்று கூட குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு இடதுசாரிகள் அதிகம் செல்வாக்கு பெற்ற பகுதிகளில் இதுவும் ஒன்று. புனிதமான கங்கையின் கரையில் அமைந்துள்ள பெகுசராய் பீகாரின் அரசியல் வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
1870ல் பீகாரின் முக்கிய நகரமான முங்கரின் துணை நகரமாக நிறுவப்பட்டது தான் இந்த பெகுசராய்.. துணை நகரமாக நிறுவப்பட்ட இது காலப்போக்கில் முக்கிய லோக்சபா தொகுதியாக உருவெடுத்துள்ளது.
எந்த சமூகம்: இந்த பெகுசராய் அதிகப்படியாகக் கிராமப்புறத்தையே உள்ளடக்கிய ஒரு தொகுதியாகும். இங்கே 81% வாக்காளர்கள் கிராமப்புறங்களிலும் 19% மக்கள் நகர்ப்புறங்களிலும் வசிக்கிறார்கள். மத அடிப்படையில் பார்க்கும் போது இங்கே 85% மக்கள் இந்துக்கள் ஆகும். 15% சதவிகித மக்கள் முஸ்லிம்கள். இங்கே பல ஆண்டுகளாக, பிராமண மற்றும் பூமிஹார் சமூக வேட்பாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் இந்த இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாறி மாறி வென்றுள்ளனர்.
1952 முதலே இருக்கும் பாரம்பரிய தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தொகுதியில் அதிகபட்சமாகக் காங்கிரஸ் 9 முறை வென்றுள்ள நிலையில், பாஜக மற்றும் ஜேடியு தலா இரு முறை வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 4 முறை வென்றுள்ளன. என்ன தான் காங்கிரஸ் இங்கே அதிக முறை வென்றாலும் அதெல்லாம் 1990கள் வரை தான். அதன் பிறகு காங்கிரஸால் இங்கே வெல்லவே முடியவில்லை. 2000க்கு பிறகு நடந்த 4 தேர்தல்களில் ஜேடியு மற்றும் பாஜக தலா இரு முறை வென்றுள்ளன.
பாஜக ஆதிக்கம்: கடைசியாகக் கடந்த 2014 தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜகவின் கிரிராஜ் சிங் வென்றார். அவர் 6.92 லட்சம் வாக்குகளைப் பெற்று 4.2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அங்கே இடதுசாரிகள் சார்பில் போட்டியிட்ட ஜேஎன்யு மாணவர் அமைப்பினர் முன்னாள் தலைவர் கன்னையா குமார் 2.69 லட்சம் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் வந்தார். இங்கே வென்ற கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக இப்போது இருக்கிறார்.
தொகுதி எப்படி: பெகுசராய் தொகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களே பிரதானம். இங்கே பராவ்னி சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட சில தொழிற்சாலைகளும் உள்ளன. ஒரு காலத்தில் பீகாரில் முக்கிய தொழில் நகராக வளர்ந்து வந்த பெகுசராய் இப்போது தள்ளாடி வருகிறது. இங்குப் பல சிக்கல்கள் நிலவி வருகிறது.
2014ல் கூட "மோடி அலை" எடுபடாத தொகுதி.. உபி அசம்கரில் இம்முறையும் கடும் போட்டி! ரேஸில் முந்துவது யார்
உள்கட்டமைப்பு மேம்பாடு, பராவ்னி சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கம். புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதில் இங்கே சவால் நிலவுகிறது. சிமாரியா அருகே ஆறு வழி பாலம், கவார் ஏரியின் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக இருக்கிறது. மேலும், ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும், புதிய கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளது.
எதிர்க்கட்சிகள் வியூகம்: இந்த முறை பாஜக சார்பில் மத்திய அமைச்சரும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார். உள்ளூரில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாலும் அவரது சமூகத்தினர் ஆதரவும் இவருக்கு இருப்பதும் பிளஸ் பாயிண்ட். அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் சிபிஐ கட்சியில் இருந்து அவதேஷ் ராய் போட்டியிடுகிறார். ஒபிசி தலைவரான அவதேஷ் மூலம் முஸ்லீம் மற்றும் யாதவர்கள் வாக்குகளைப் பெறலாம் என்பதே எதிர்க்கட்சிகளின் திட்டம்.
இப்படி இரு தரப்பும் கிட்டத்தட்ட சம பலத்துடன் இருந்தாலும் மோடி பேக்டர் காரணமாக இங்கே பாஜக வேட்பாளர் வெல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications