திமுக அதிமுக சேர்ந்தால் எப்படியோ அப்படி.. பீகார் மாநில கட்சிகள் செய்த சம்பவம்! ஆபரேசன் தாமரைக்கு அடி
பாட்னா: தமிழ்நாட்டில் எப்படி திமுகவும் அதிமுகவும் பிரதான கட்சிகளாக உள்ளதோ அதேபோன்று பீகாரில் முக்கியமான 2 கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேற்றி உள்ளன.
தமிழ்நாட்டில் 2 பிரதான கட்சிகளாக திகழ்பவை திமுகவும் அதிமுகவும். சுதந்திர இந்தியாவிலேயே முதன்முதலாக மாநிலத்தில் ஆட்சியமைத்த மாநில கட்சி என்ற பெருமையை அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக பெற்றது தொடங்கி இன்று வரை திமுகவும், அ.திமுகவுமே மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன.
இந்த கட்சிகளும் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி அமைத்தாலும் காமராஜருக்கு பிறகு எந்த தேசியக் கட்சியை சேர்ந்தவரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றது கிடையாது.
மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்
திமுக - அதிமுக
கடந்த சில ஆண்டுகளில் திமுகவிலும் அதிமுகவிலும் இரு பெரும் தலைவர்கள் மறைந்தாலும், இவ்விரு கட்சிகளை சுற்றியே தமிழ்நாடு அரசியல் நகர்கிறது. அந்த அளவுக்கு தமிழ்நாடு அரசியலில் இந்த 2 கட்சிகளும் ஆழப்பதிந்து உள்ளன. வைகோ, விஜயகாந்த், சீமான், அண்ணாமலை என தேர்தலுக்கு தேர்தல் சிலர் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடுவது தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல.
ஆர்ஜேடி - ஜேடியு
தமிழ்நாடு அரசியலை அப்படியே பீகாருடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அங்கும் 2 மாநிலக் கட்சிகளை சுற்றியே அரசியல் நகர்கிறது. ஒன்று லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம். மற்றொன்று நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம். இவ்விரண்டு கட்சிகளுமே பீகாரில் இதுவரை ஆட்சி செய்து இருக்கின்றன. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியமைத்த பின்னர் பீகாரில் அக்கட்சி வளரத் தொடங்கியது.
Recommended Video
2015 தேர்தல்
இரு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவியதால், சுதாரித்துக் கொண்ட நிதீஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் தங்கள் அரசியல் பகைகளை மறந்துவிட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாக கூட்டணி அமைத்து காங்கிரஸையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இதனையடுத்து நிதீஷ் குமார் முதலமைச்சராகவும் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
பாஜகவுடன் கூட்டணி
அதன் பின்னர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு வேகம் எடுக்கத் தொடங்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதீஷ் குமார் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் நிதீஷ்குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி அதன் பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார்.
2020 தேர்தல்
அதன் பின்னர் 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற நிதீஷ் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது.
அதிர்ச்சி கொடுத்த பாஜக
ஆனாலும், நிதீஷ் குமாரையே முதலமைச்சராக்கி பாஜக கூட்டணியை தொடர்ந்து. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசில் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாகவே நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
நிதீஷ் குமார் அதிருப்தி
குறிப்பாக பாஜகவை சேர்ந்த பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா, ஆளும் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியது, நிதீஷுக்கு நெருக்கமான பீகாரில் துணை முதலமைச்சராக இருந்த பாஜக பிரமுகர் சுஷில் மோடியை பீகார் அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு மாற்றியது, நிதீஷிடம் கேட்காமல் ஆர்.சி.பி. சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியது போன்ற பாஜகவின் பல செயல்பாடுகளால் நிதீஷ் குமார் அதிருப்தியில் இருந்து வந்தார்.
பாஜக அதிருப்தி
அதேபோல், பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களை நிதீஷ் குமார் எதிர்த்து வருவது, பாஜகவுக்கு விருப்பமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயன்றது, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தது போன்ற விசயங்களால் பாஜக தலைமையும் நிதீஷ் குமார் மீது அதிருப்தியில் இருந்திருக்கிறது.
பிரதமரின் கூட்டங்கள்
இந்த நிலையில்தான் ஞாயிறு அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை நிதீஷ் குமார் புறக்கணித்தார். சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார். இதேபோன்று அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார்.
ஆபரேசன் தாமரைக்கு அடி
ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பதற்கு விரிசலே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார் நிதீஷ் குமார். தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளார். ஆபரேசன் தாமரை என்று கூறி மாநில கட்சிகளை வளைத்து ஆட்சியை பிடித்து வந்த பாஜகவை, பீகாரின் 2 மாநில கட்சியில் சேர்ந்து செய்து ஆளும் கூட்டணியிலிருந்தே வெளியேற்றி இருப்பது கவனிக்கத்தக்கது.