இவர்தான் புதிய தேச தந்தையா? இந்தியாவுக்கு என்ன செய்துவிட்டார்? மோடியை கடுமையாக தாக்கிய நிதிஷ் குமார்
பாட்னா: "புதிய இந்தியாவுக்கு புதிய தேசத் தந்தை நரேந்திர மோடி என்ன செய்துவிட்டார்?" என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத் தந்தை எனக் கூறியதை விமர்சிக்கும் வகையில் நிதிஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 முதல் 15 செல்வந்தர்களின் நலனுக்காக அவர் உழைத்ததை விட, வேறு ஒன்றும் செய்ததாக எனது நினைவில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
வார்த்தையை விட்ட அம்ருதா பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பங்கேற்றார். அப்போது அவர், "பிரதமர் மோடி தான் இந்தியாவின் தேசத்தந்தை" எனக் கூறினார். அம்ருதா இப்படி கூறியதும் அங்கிருந்த எழுத்தாளர்கள் குறுக்கிட்டு, "நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி யார்?" எனக் கேள்வியெழுப்பினர். திடீரென இப்படி கேள்விக் கேட்டதும் திணறிய அம்ருதா, பின்னர் சுதாரித்துக் கொண்டு, "இந்தியாவுக்கு 2 தேசத் தந்தைகள் இருக்கின்றனர். முந்தைய இந்தியாவுக்கு காந்தியடிகள் தேசத் தந்தையாக இருந்தார். இன்றைய புதிய இந்தியாவின் தேசத் தந்தையாக நரேந்திர மோடி இருக்கிறார்" எனக் கூறினார்.
குவிந்த கண்டனம்
அம்ருதாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், "மகாத்மா காந்தியடிகள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகவும், எளிய மக்களின் விடுதலைக்காகவும் போராடி உயிர் நீத்தவர். அதனால்தான் அவரை நாம் தேசத் தந்தை என்கிறோம். ஆனால், ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் நரேந்திர மோடியை காந்தியடிகளுடன் எப்படி ஒப்பிட முடியும்? இந்திய மக்களுக்கு இந்த புதிய இந்தியாவும் வேண்டாம். புதிய தேசத்தந்தையும் வேண்டாம்" என அவர் கூறினார்.
நிதிஷ் குமார் 'பஞ்ச்'
இந்நிலையில், அம்ருதா பட்னாவிஸ் கூறிய கருத்து குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பாஜகவினர் கூறும் எதையும் நான் தீவிரமாக அணுகியது இல்லை. உதாரணத்துக்கு, நாங்கள் தான் தேசபக்தர்கள் என பாஜகவினர் கூறுகிறார்கள். தேசபக்திக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
"என்ன செய்தார் புதிய தேசத்தந்தை?"
"இந்திய விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறிய பங்களிப்பை கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு வழங்கவில்லை. ஆனால், தங்களை ஆர்எஸ்எஸ் காரர்கள் தேசபக்தர்கள் எனக் கூறுகிறார்கள் அல்லவா.. அப்படிதான் அம்ருதா பட்னாவிஸ் கூறுவதையும் பார்க்க வேண்டும். அவர் கூறிய புதிய தேசத் தந்தை நரேந்திர மோடி புதிய இந்தியாவுக்காக என்ன செய்துவிட்டார்?" என நிதிஷ் குமார் கூறினார்.