பீகாரில் பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. காரணமே இதுதான்.. பற்ற வைத்த பிரசாந்த் கிஷோர்..பரபர தகவல்
பாட்னா: பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக இருந்த நிதிஷ் குமார் கடந்த ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து விலகி வேறு கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதன் பின்னணியில் உள்ள காரணத்தை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக வெளியிட்டுள்ளார்.
பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியைமக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இருப்பினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
78 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, 45 இடங்களில் ஜெயித்த ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வரானார். இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகளாக நடந்தது.

முதல்வராக தொடரும் நிதிஷ் குமார்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டார். மேலும் 79 எம்எல்ஏக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் 19 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி உள்பட பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். மகாகத்பந்தன் என்ற பெயரில் இந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பிரசாந்த் கிஷோர்
இந்நிலையில் தான் பீகாரில் பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்து கொண்டது பற்றி பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் நிதிஷ் குமாருடன் நெருக்கமாக இருந்த பிரசாந்த் கிஷோர் அதன்பிறகு விலகினார். சமீப காலமாக நிதிஷ் குமாரை அவர் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் கூறிய கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுபற்றி பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

முதல்வர் பதவியில் இருந்து நீக்கம்
2022 மார்ச் மாதம் டெல்லியில் நிதிஷ் குமார் என்னை சந்தித்தார். அப்போது மகாகத்பந்தன் கூட்டணி பற்றி கூறினார். இந்த கூட்டணியில் இணையும்படி என்னிடம் தெரிவித்தார். 2024 நாடாளமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் நீக்கப்படுவார் என அவர் அறிந்திருந்தார். இதனால் அவர் முன்கூட்டியே பாஜகவை கழற்றிவிட்டு மகாகத் பந்தன் கூட்டணி அமைத்து முதல்வராகி உள்ளார்.

அரசியல் வாழ்க்கைக்காக...
மேலும் 2025 தேர்தலில் எப்படியும் முதல்வராக இருக்கமாட்டோம் என்பதை நிதிஷ் குமார் அறிந்துள்ளார். இதனால் வேறு யாராவது முதல்வராக வர வாய்ப்புள்ளது. இந்த வேளையில் பீகாரின் நிலைமை மோசமாக்க நிதிஷ் குமார் விரும்புகிறார். அப்படி நடந்தால் மக்கள் தனது பக்கம் திரும்புவார்கள். இதன்மூலம் தனது அரசியல் வாழ்க்கையை எப்போதும் உயிர்ப்புடன் வைக்க நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். இதனால் தான் தற்போதைய நிலையில் அவரை விட சிறந்த ஒருவரை முதல்வராக்க அவர் விரும்பவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications