பீகாரில் பாஜகவிற்கு மாறி மாறி.. வாக்குகளை வாரி வழங்கிய பெண்கள்.. மோடியின் மாஸ் பிளான்.. பின்னணி
பாட்னா: பீகாரில் 2025 சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை பெண்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் வாக்குப்பதிவு 71.6% ஆக உயர்ந்துள்ளது. இது ஆண்களின் வாக்குப்பதிவை (62.8%) விட 8.8 சதவீதம் அதிகம். பீகாரின் தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய வித்தியாசமாகும்.

பீகார் பெண்கள் வாக்கு
வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் பெண்கள் ஆண்களை மிஞ்சியிருப்பது இதுவே முதல் முறையாகும். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் பிறகு, பீகாரில் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும், 3.51 கோடி பெண் வாக்காளர்களும் இருந்தனர். அதாவது, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 42.34 லட்சம் குறைவாக இருந்தனர்.
இருப்பினும், இந்த முறை 2.52 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில், 2.47 கோடி ஆண்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்திருப்பதைக் காட்டுகிறது. 2005 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் முதல்முறையாக முதல்வரானதிலிருந்து, கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
மோடி திட்டம்
சமீபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் பெண்களுக்கான சுயதொழில் திட்டமான முக்யமந்திரி மஹிளா ரோஜ்கர் யோஜனாவைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தேர்தலுக்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ₹10,000 நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
இவ்விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (ஜே.டி.யு.) மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி (பா.ஜ.க.) ஆகியோர் பாட்னாவில் இருந்து கலந்துகொண்டனர். இத்திட்டம் முதலில் செப்டம்பர் 22-ஆம் தேதி அன்று முதல்வரால் மட்டும் நிதி வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்கு முன் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு அரசு கூடுதலாக ₹2 லட்சம் வழங்கும். இத்தொகையை விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள், தையல், நெசவு மற்றும் பிற சிறு தொழில்கள் உள்ளிட்ட தங்களுக்கு விருப்பமான துறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்திற்காக மொத்தம் ₹7,500 கோடி நிதியை மாற்றிய பிரதமர் மோடி, முந்தைய ஆர்.ஜே.டி. அரசை கடுமையாக விமர்சித்தார். அந்த காலகட்டத்தில், பீகார் பெண்கள் சட்ட ஒழுங்கின்மை மற்றும் ஊழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். முக்கிய சாலைகள் சேதமடைந்திருந்தன, பாலங்கள் இல்லை. மோசமான உள்கட்டமைப்பு காரணமாக பெண்கள் தான் அதிகம் சிரமப்பட்டனர். வெள்ளத்தின் போது சிரமங்கள் அதிகரித்தன, கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைய முடியவில்லை, என்று மோடி குறிப்பிட்டார்.
பாஜகவிற்கு வாக்களித்த பெண்கள்
இப்படிப்பட்ட நிலையில்தான் பீகாரில் 2025 சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர். பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 136 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீகாரில் இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications