அடுத்தடுத்து சம்பவம்.. மா சுப்பிரமணியனை தொடர்ந்து லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்..பரிதவிப்பு
பெரம்பலூர்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை தொடர்ந்து இன்று பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கி தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்குள் லிப்ட்டுக்கு 2 அமைச்சர்களும், ரோப் காருக்குள் ஒரு அமைச்சரும் சிக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை, பண்பாட்டு கொண்டாட்டங்கள் ஒருங்கிணைத்து கலை சார் பயிற்சிகளும் கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு ரத்து எப்போது? நாங்க எது செய்தாலும் அது மாணவர்கள் நலனுக்கு தான்! அமைச்சர் மா.சு.விளக்கம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் மாணவ-மாணவிகள் இடையே கலை திருவிழா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
லிப்ட்டில் சிக்கிய அமைச்சர்
இதில் பங்கேற்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் சென்றார். அவர் லிப்ட்டில் ஏறி மேல்தளம் செல்ல முயன்றார். அப்போது திடீரென்று லிப்ட் பாதிவழியில் நின்றது. லிப்ட்டில் ஏற்பட்ட திடீர் பழுதால் அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டுக்குள் சிக்கினார்.
வெளியே வந்த அமைச்சர்
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக ஊழியர்கள் வந்து லிப்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்தார். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த நவம்பரில் சுகாதாரத்துறை அமைச்சர் லிப்ட்டில் சிக்கிய நிலையில் தற்போது அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியுள்ளார்.
சென்னையில் மா சுப்பிரமணியன்
முன்னதாக கடந்த நவம்பர் மாத இறுதியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்றார். திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு மருத்துவுமனைகளை ஆய்வு செய்தபோது அவர் லிப்டில் பயணித்தார். இந்த வேளையில் லிப்ட் பாதியில் நின்றது. இதையடுத்து அவர் அவசர வாயில் வழியாக வெளியேறினார். அதன்பிறகு கடந்த மாதம் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரோப் கார் வழியாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கீழே இறங்கியபோது மின்தடை ஏற்பட்டதால் அவர் பாதிவழியில் சிக்கி தவித்தார். தமிழகத்தில் தற்போது கடந்த 40 நாட்களுக்குள் லிப்ட்டுக்கு 2 அமைச்சர்களும், ரோப் காருக்குள் ஒரு அமைச்சரும் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.