புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ்
பெரம்பலூர்: இந்த நவீன உலகில் எந்திர புரட்சியால் உலகமே நமது கைக்குள் அடங்கி விட்ட நிலையில் சிலர் மூடநம்பிக்கையில் இன்னும் மூழ்கி கொண்டுதான் இருக்கின்றனர். மூட நம்பிக்கையில் போலி சாமியார்களின் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளை கூட சிலர் பலி கொடுத்து வருகின்றனர்.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இந்த நிலையில் வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் ஒருவர் கிளப்பி விட அதனை நம்பி வீட்டுக்குள் 20 அடிக்கு குழி தோண்டிய சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.
புதையல் ஆசை
பெரம்பலூர் அருகே விளாமூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இரு சக்கர வாகனத்தில் சென்று ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட பிரபு, ஜோதிடர் ஒருவரை அடிக்கடி பார்க்கச் செல்வது வழக்கம். அப்போது அந்த ஜோதிடர் உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது என்று பொய்களை கட்டவிழ்த்து உள்ளார்.
20 அடி ஆழமுள்ள குழி
ஜோதிடரின் பேச்சை உண்மையென நம்பினார் பிரபு. இதனால் நண்பர்கள் உதவியுடன் வீட்டில் குழி தோண்ட முடிவு செய்தார். தொடர்ந்து பரமத்திவேலூரை சேர்ந்த பூசாரி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் வீட்டில் பூஜை செய்து பிரபு உள்பட 8 பேர் புதையல் இருப்பதாக கருதி வீட்டில் குழி தோண்ட ஆரம்பித்தனர். மூன்று நாட்களாக இரவும், பகலுமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர்.
மக்கள் கண்டுபிடித்தனர்
பிரபு வீட்டின் முன்பு பூசாரி, அவரது நண்பர்கள் வந்த கார் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. மூன்று நாட்களாக வீட்டின் கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பிரபு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது 20 அடி ஆழம் தோண்டப்பட்டு மண்குவியல் கிடப்பதும், மாந்தீரிக பூஜை செய்யப்பட்டு இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் நேரில் சென்றனர்
இதுபற்றி பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மாந்தீரிக பூஜையில் ஈடுபட்டிருந்த பரமத்திவேலூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டம் மதுரம்சாவடி கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணிமாறன், கோட்டடாத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலு, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் உரிமையாளர் பிரபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
இதனை தொடர்ந்து பரமத்திவேலூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு புதையலுக்காக நரபலி கொடுப்பது போன்ற சம்பவம் நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிடத்தை நம்பி மூட நம்பிக்கையால் யாரும் இதுபோன்று செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.