ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு-பாமக மா.செ. பழனிச்சாமி சர்ச்சை பேச்சு
மயிலாடுதுறை: ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
ஏங்க.. கேட்சை விட்டா 3 சிக்ஸ் கொடுப்பீங்களா? ஷஹீன் அப்ரிடியை வறுத்த வருங்கால மாமனார் ஷாகித் அப்ரிடி
அண்மையில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
சூர்யாவுக்கு கேள்விகள்
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு மொத்தம் 9 கேள்விகளை எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காமல் சூர்யா அமைதியாக இருப்பது அறமற்றது என கூறியிருந்தார்.
சூர்யா பதில்
நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையும் இழிவுபடுத்தும் உரிமையை வழங்கவில்லை என்ற அன்புமணியின் கருத்தை ஏற்கிறேன் என கூறியிருந்தார்.
சூர்யா திரைப்படத்துக்கு எதிர்ப்பு
இந்நிலையில் மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பாமகவினர், வேல் திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த திரையரங்கில் வேல் திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அப்போது சூர்யாவின் போஸ்டர்களையும் பாமகவினர் கிழித்து முழக்கமிட்டனர்.
சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரைத் தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். இந்த மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்றார். அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு வழங்குவோம் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியிருந்தார். தற்போது பாமக செயலாளர் பகிரங்கமாக நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் பரிசு என அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.