நட்ட நடுரோட்டில் மது! நடுவானில் சிகரெட்.. அத்துமீறிய யூடியூபர் தலைமறைவு.. சன்மானம் அறிவித்தது போலீஸ்
டேராடூன்: நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்து மது குடித்த யூடியூபர் பாபி கட்டாரியாவை போலீஸார் கைது செய்ய சென்ற போது அவர் தப்பியோடிவிட்டார். அவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டேராடூன் போலீஸார் அறிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார்.
சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் குறித்து போடுவது, உடற்பயிற்சிகளை எப்படி செய்வது உள்ளிட்ட விஷயங்களை தெரிவித்து வருவது வழக்கம். அது போல் தான் எத்தனை ஆடம்பரமாக இருக்கிறேன் என்பதையும் அவர் வீடியோவாக எடுத்து போடுவார்.

உத்தரகண்ட் மாநிலம்
இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு பகுதியில் நடுரோட்டில் நாற்காலி, டேபிள் போட்டுக் கொண்டு சோடா ஊற்றி மது அருந்துவதையும் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரது வீடியோ வைரலானது. அது மட்டுமல்லாமல் இவரது செயலால் அன்றைய தினம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாபி கட்டாரியா
இது போல் பாபி கட்டாரியா, கடந்த ஜனவரி 13 ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது பாபி கட்டாரியா படுத்துக் கொண்டே புகைப்பிடிக்கும் காட்சியும் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பிப்ரவரி மாதம் அவர் விமானத்தில் பயணிப்பதற்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

விசாரணை
எனினும் இது தொடர்பான விசாரணையில் "இது விமானம் அல்ல. சும்மா டம்மிதான். அது துபாயில் படப்பிடிப்பின் ஒரு பகுதி. விமானத்தில் லைட்டர் எடுத்து செல்லவே அனுமதி கிடையாது, இதில் சிகரெட் எப்படி? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இவர் இது போல் அலப்பறைகளை செய்வது 2017ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது.

கைது செய்ய திட்டம்
நவ்பாரத் டைம்ஸ் செய்தியின் படி குருகிராமில் உள்ள காவல் நிலையத்திலும் ஒரு பெரிய கலாட்டா செய்திருந்தார். அவரது கிராமத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக அவர் மீது போலீஸார் 6 வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நடுரோட்டில் மது குடிக்கும் வீடியோவை வைத்து பாபியை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் ஹரியானா மாநிலம் டேராடூனுக்கு புறப்பட்டனர்.

தலைமறைவு
போலீஸார் வருவதை அறிந்த பாபி கட்டாரியா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டேராடூன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications