3 லட்சம் டீல்.. பொதுப்பணித்துறை பொறியாளருக்கு கூலிப்படை மூலம் ஸ்கெட்ச்.. சிசிடிவி மூலம் அம்பலம்!
புதுச்சேரியில் ஒப்பந்த தகராறில் பொதுப்பணித்துறை பொறியாளரை ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒப்பந்த தகராறில் பொதுப்பணித்துறை பொறியாளரை ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(54). புதுச்சேரி அரசின் பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் செல்வராஜ் வீடு திரும்பிகொண்டிருந்தார்.
அப்போது சக்திநகர் பகுதியில் சென்ற போது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.
இதில் செல்வராஜிக்கு தலை, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் மயங்கி கிடந்த செல்வராஜை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை, அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜை தாக்கியது கூலிப்படையாக செயல்பட்டு வரும் செயின்ட்பால்பேட் நிவாஸ், ஜீவானந்தபுரம் தமிழ், சந்துரு, அருண், கிஷோர் என்பதும், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசின் நகராட்சி கட்டிட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி கூலிப்படையை ஏவி தாக்கியதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தியின் கார் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து சுபாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி கடற்கரை சாலையில் நகராட்சி கட்டிடம் கட்டுமான பணி பொதுப்பணித்துறை பொறியாளர் செல்வராஜ் மேற்பார்வையில் நடந்து வந்ததாகவும், இந்த கட்டிட கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கட்டுமான பணிகளில் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி இடையே பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் செல்வராஜை தீர்த்துகட்டச் சொல்லி கார் ஓட்டுநர் சுபாஷிடம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி ரூபாய் 3 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலமாக பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளனர்.
கார் ஓட்டுநர் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.