புதுச்சேரியில் இரவு ஊரடங்கு.. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி.. இது மட்டும் கட்டாயம்
புதுச்சேரி: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான கொரோனா கட்டுப்பாடுகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகள்
அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. டெல்லி, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாடு, டெல்லி என கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். டிசம்பர் 31 நள்ளிரவு முதல் இந்த இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் என்றும் புதுச்சேரி அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
விலக்கு எப்போது
வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறதாகப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்று (டிச.31) மற்றும் நாளை(ஜன.1) மட்டும் இரவு 12.30 மணிவரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி அளிக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கொண்டாட்டங்கள் நடைபெற அறிவுறுத்தப்படுவதாகவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
என்ன தேவை
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் இரவு 12.30 முதல் அதிகாலை 2 மணிமுதல் பொதுமக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்படுவதாகப் புதுவை அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் புதுச்சேரி செல்ல தொடங்கியுள்ளனர். இருப்பினும், 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாத நபர்களை போலீசார் எல்லையிலேயே திரும்பி அனுப்பி வருகின்றனர்.