மேலும் ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவு.. புதுச்சேரியில் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளதால் சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 12ஆக உயர்ந்து உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் 30, மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் எம்எல்ஏக்கள் 3 பேர் என மொத்தம் 33 இடங்கள் உள்ளது.
இதில் புதுச்சேரியின் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தமிழகம், கேரளாவுடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக போட்டியிட்டன. இதேபோல் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக போட்டியிட்டன.
என்ஆர் காங்கிரஸ் ஆட்சி
இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. அதேநேரம் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அமைச்சரவை பங்கீடு இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.
பாஜகவின் பலம்
பாஜக துணை முதல்வர் உள்பட முக்கிய அமைச்சர் பதவி கேட்பதால் இழுபறி நிலவுவதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் முதல்முறையாக புதுச்சேரியில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. இதனிடையே மத்திய அரசு சார்பில் பாஜகவினர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்தது.
பாஜகவிற்கு ஆதரவு
இந்நிலையில் பாஜகவிற்கு மேலும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததால், பாஜகவின் பலம் 11 ஆக உயர்ந்தது. தற்போது தற்போது திருபுவனை சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆதரவளித்துள்ள நிலையில் பாஜகவின் பலம் 12ஆக அதிகரித்துள்ளது.
கூட்டணி ஆட்சி
தற்போதைய நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பலம் 10 ஆக உள்ளது. பாஜகவின் பலம் 12 என்று உள்ளது. பாஜக ஆதரவு அளித்துள்ளதால் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சைகள் உள்ளனர். இவர்களின் பலமும் பாஜகவிற்கு கிடைத்தால் பாஜகவின் 14 என்கிற அளவிற்கு உயர்ந்துவிடும் என்ற நிலை இருக்கிறது.
துணை முதல்வர்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்ற நிலையில் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் நமச்சிவாயத்தை துணை முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரண்டு அமைச்சர்கள் பாஜக சார்பில் விரைவில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போது என்பது தான் இது வரை தெரியவில்லை. ஏனெனில் இன்னும் உடன்பாட்டை ரங்கசாமி ஏற்கவில்லை. இதற்கிடையே புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்களுக்கும், மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.