தமிழிசையை நாங்கதான் வரவேற்போம்.. அடித்துக்கொண்ட பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் - போலீஸ் தடியடி
புதுச்சேரி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்பதில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
ஆந்திர மாநிலம் அருகே அமைந்து உள்ள ஏனாம் பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள் வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அசாம் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தால் நடுவழியில் நின்ற ரயில்கள் - பயணிகள் பத்திரமாக மீட்பு
வெள்ள பாதிப்பு
கோதாவரி ஆற்றில் கரைகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது. குறிப்பாக ஏனாம் பகுதி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் 5 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கூட சிக்கல் நிலவி வருகிறது.
நிவாரண உதவிகள்
ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஏனாமில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனை முதலமைச்சர் என்.ரங்கசாமி ஏனாமுக்கு அனுப்பி வைத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அறிவுறுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
ஏனாம் சென்ற தமிழிசை
இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் ஏனாம் பகுதியில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட அங்கு சென்றார். ஏனாம் மண்டல நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்க என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆதரவாளர்கள், பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
வெடித்த மோதல்
அப்போது தமிழிசை சவுந்திரராஜனை முதலில் யார் வரவேற்பது என்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஏற்கனவே தேர்தல் நேரத்தில் இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழிசை முன்பாகவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி மோதலை கலைத்தனர். இதனால் உடனடியாக ஆய்வுக்கூட்டத்தை முடித்துக் கொண்ட தமிழிசை, அங்கிருந்து வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய சென்றார்.