நாளை முழு அடைப்பு போராட்டம் கிடையாது... முதல்வர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்குள் துணைநிலை ஆளுநர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு பின் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுச்சேரி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கை உள்ளது என்றும், முழு கடையடைப்பில் பங்கேற்கும் படி புதுச்சேரி வணிகர் சங்கத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆளுநர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமி அரசுப் பணிகளை அங்கு இருந்தவாறே கவனித்து வந்தார். மேலும், நேரில் பேச அழைத்து ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை முதல்வர் நாராயணசாமி நிராகரித்துள்ளார்.
இதற்கிடையே, ஆளுநர் கிரண்பேடி விடுத்த கோரிக்கையை அடுத்து, மத்திய படை நாளை புதுச்சேரிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர், முதல்வர் இடையே போராட்டம் முடிவு இல்லாமல் போய்க்கொண்டு இருப்பதால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.