கொரோனா: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்.. கிரண்பேடி எச்சரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், ஜூலை மாதத்தில் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். இதை ரெட் அலர்ட்டாகவோ, கோவிட் அலர்ட்டாகவோ புதுச்சேரி மக்கள் கருத்தில் எடுத்துகொள்ள வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனையில் 149 பேர் சிகிச்சையில் உள்ளனர். 116 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர்.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க
சமூக இடைவெளி, முககவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல் அவசியம். சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.
இந்தநிலை தொடர்ந்தால் ஜூலை மாதத்தில் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். யாருக்கு வேண்டுமாலும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்வது அவசியம். புதுச்சேரி அரசு விதிக்கும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். அதை மீறி எவ்வாய்ப்பையும் நீங்களாக எடுக்காதீர்கள். கூட்டாக எதிர்கொள்ளும் கடும் அபாயங்களை உணர்வது நமது கடமை.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தும் போது புதுச்சேரியில் மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகபட்ச முன் தற்காப்பு முயற்சி அவசியம். அரசு தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் நடவடிக்கை எடுப்பதுபோல், தனிப்பட்ட நபர்களும் அதிகளவில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை ரெட் அலர்ட்டாகவோ, கோவிட் அலர்ட்டாகவோ புதுச்சேரி மக்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என கிரண்பேடி வலியுறுதியுள்ளார்.













Click it and Unblock the Notifications