புதுவையில் வழிபாட்டு தலங்களில் கூடுதல் தளர்வுகள்.... ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுச்சேரி: கோயில் திருவிழாக்கள் மற்றும் ரமலான் நோன்பைக் கருத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இரவு 10 மணி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்கள் செயல்படப் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுமதியளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதுவை அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

அதில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து சமய நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகையில் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு திருவிழாக்கள் நடைபெறவுள்ளது என்பதால் அதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. மேலும், இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கப்படும் ரமலான் நோன்பு வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதால் இரவு நடத்தப்படும் தொழுகைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,அனைத்து சமய தலைவர்கள், மதகுருமார்களின் வேண்டுகோளின்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 10 மணி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications