ஓட்டுப் போட காசு வாங்க மாட்டோம்.. உறுதிமொழி எடுத்த நரிக்குறவர்கள்.. சபாஷ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது ஓட்டு போட காசு வாங்க மாட்டோம் என்று நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் கூடி உறுதிமொழி எடுத்தது அனைவரையும் அசரடித்தது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெற கூடாது, அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி தேர்தல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்களர்கள் வாக்களித்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் விவிபாட் என்ற இயந்திரங்களை இந்த ஆண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த விவிபேட் இயந்திரத்தின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி முழுவதும் விவிபாட் இயந்திரம் வாகனத்தில் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கருவடிக்குப்பம் விமான நிலையத்திற்கு பின்புறம் வசிக்கும் நரிக்குறவ இன மக்களிடையே விவிபேட் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற நரிக்குறவர்கள் விவிபாட் மாதிரி ஓட்டுகளை பதிவு செய்து பார்த்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன ஓட்டுக்கு பணம் பெற மாட்டோம் என உறுதிமொழியும் ஏற்றனர்.













Click it and Unblock the Notifications