ஜிப்மருக்கு முன்னறிவிப்பின்றி நோயாளிகளை அனுப்ப வேண்டாம்.. இயக்குநர் அறிக்கை
புதுவை: கூடுதல் நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன் கூட்டியே தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர மற்றும் அதிதீவிர கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அத்தகைய நோயாளிகளுக்கு இடமளிக்க ஜிப்மர் அனைத்து முயற்சியை மேற்கொள்கிறது. அதே நேரத்தில் கொரோனா அல்லாத மற்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் முடிந்தவரை பராமரிக்க முயற்சிக்கிறது.
சமீபத்திய நாட்களில் தீவிர கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரையால் எந்தவித முன் அறிவிப்புமின்றி நேராக ஜிப்மர் கொரோனா தொற்று மருத்துவப் பிரிவுக்கு வருகின்றனர்.
குறிப்பாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும்போது அல்லது படுக்கைகள் இல்லாதபோது தேவையற்ற காலதாமதத்திற்கும் நோயாளியின் உடல்நிலையை மேலும் மோசமாக பாதிப்பதற்கும் காரணமாகிறது.
கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
ஆகையால் நோயாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும், குறிப்பிடத்தக்க கூடுதல் நோய்கள் உள்ள நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்தவொரு மருத்துவமனையும் முன்கூட்டியே தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவேண்டும்.
தேவைப்படும் வசதிகளுடன் கூடிய படுக்கை உள்ளதா? என்பதை ஜிப்மர் உறுதிபடுத்திய பின்னரே நோயாளிகளை ஜிப்மருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.