ஜிப்மரில் இந்தி திணிப்பா? இல்லவே இல்லை! அரசியலாக்க வேண்டாம், அடித்து சொல்லும் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை எனவும், இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டது.

இந்தி திணிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்ததுக்கு அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் இன்று மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிப்மர் மருத்துவமனை
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் பேசிய அவர், ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில்,தமிழ் எந்தவிதத்திலும் வேறுபடாமல்,தடைபடாமல் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழிசை ஆய்வு
மேலும், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மருத்துவமனையில் இருப்பதால், உள்நிர்வாக ரீதியான பணிக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் இந்தி இடம் பெற்றுள்ளது. இது இந்தி திணிப்பு என்று தவறாக வெளியில் பரவியுள்ளது.மேலும், ஜிப்மரில் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும். எல்லா பெயர் பலகைகளிலும் முதல் பகுதியாக தமிழ் இருக்க வேண்டும்.

இந்தி திணிப்பு இல்லை
நோயாளிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய அத்தனை அறிக்கைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தான் நான் பிரதானமாக எடுத்துக் கொள்கிறேன். ஆகவே, ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை. தமிழ் பிரதானப்படுத்தப்படுகிறது. இங்கு இந்தி வெறி இல்லை, திணிப்பு இல்லை. இதனை அரசியல் ஆக்க வேண்டாம்" என கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications