இப்பவே இத்தனை செய்கிறோம்.. கிரண் பேடி போட்ட கட்டை மட்டும் கழற்றி விட்டால்.. நாராயணசாமி
புதுச்சேரி: கவர்னர் நம் கையை கட்டியிருக்கும்போதே நாம் இப்படி சாதனை படைக்கிறோம். நம் கையை விடுவித்துவிட்டால் புதுவை மாநிலத்தை முதன்மையான மாநிலமாக இந்தியாவில் மாற்றுவோம். அதுபோன்ற திறமையான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நம்மிடம் உள்ளனர். இரவு பகலாக உறக்கமின்றி மக்களுக்காக உழைக்கின்றனர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1954, நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்றது. இருப்பினும் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ந்தேதி புதுச்சேரி இந்தியாவோடு முறைப்படி இணைந்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது.

இந்த நாளை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்தியாவோடு இணைப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடமான கீழூரில் புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற தினம் இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள நினைவிடத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தியாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, யூனியன் பிரதேசமான டெல்லிக்கு கொடுக்கும் நிதியை யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் 650 கோடி ரூபாய் 7 வது சம்பள கமிஷனுக்கு கொடுக்கிறோம். மத்திய அரசு இதனை நமக்கு திரும்ப தர வேண்டும். ஆனால் அந்த பணம் கொடுக்கப்படவில்லை. தானே புயலால் பாதிக்கப்பட்ட நிதி 100 கோடி கிடைக்கவில்லை. ஆயினும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை 65 சதவீதம் நாம் உயர்த்தியுள்ளோம்.

இது எந்த காலத்திலும் கிடைத்ததில்லை. 400 கோடி வருமானத்தை ஒவ்வொரு வருடமும் அதிகமாக பார்க்கிறோம். நானும் அமைச்சர்களும் சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருவதால் இது ஏற்பட்டது. புதுவை மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். அதனால் தான் கல்வி, காவல்துறை, சுற்றுலா உள்ளிட்டவற்றில் புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது.

கவர்னர் நம் கையை கட்டியிருக்கும்போதே நாம் இப்படி சாதனை படைக்கிறோம். நம் கையை விடுவித்துவிட்டால் புதுவை மாநிலத்தை முதன்மையான மாநிலமாக இந்தியாவில் மாற்றுவோம். அதுபோன்ற திறமையான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நம்மிடம் உள்ளனர். இரவு பகலாக உறக்கமின்றி மக்களுக்காக உழைக்கின்றனர். புதுவை கடற்கரை இரவு நேரத்திலும் ஒளிர்கிறது.

பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்க இடம் கிடைக்காத அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு காரணம் சட்ட ஒழுங்கு. சுற்றுலா பயணிகளுக்கு இங்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இதுதான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான உண்மையான அடையாளம். சுதந்திர காற்றை அனுபவித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக முதலமைச்சர் நாராயணசாமி வருவதற்கு முன்பு ஆளுநர் கிரண்பேடி கீழூர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications