புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.. சிலர் எதிர்க்க இதுதான் காரணம்.. தமிழிசை செளந்தரராஜன் பரபர!
புதுச்சேரி: ஏழை மாணவர்களுக்கான கல்வித் தரத்தை உயர்த்தக் கூடாது என சில அரசியல்வாதிகள் நினைப்பதால் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் கண்டிப்பாக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இந்திய விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் நடைபெற்ற கண்காட்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், காலத்திற்கு ஏற்ற பயிர் செய்யும் முறைக்கு விஞ்ஞானிகளின் ஆலோசனையை பயன்படுத்தி விவசாயிகளும், அரசும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

சிபிஎஸ்இ பள்ளிகள்
தொடர்ந்து புதுச்சேரியில் அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநில பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தரமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்கும். அதனால் மத்திய அமைச்சரிடம் அந்த கோரிக்கை வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்று தெரிவிப்பது தவறான கருத்து. புதுச்சேரியில் கண்டிப்பாக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். ஏழை மாணவர்களுக்கான கல்வித் தரத்தை உயர்த்தக் கூடாது என சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

அரசியலாக்க வேண்டாம்
தொடர்ந்து, தமிழ்நாட்டில் 1,400 க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ள நிலையில் வட இந்தியர்கள் ஆதிக்கம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் இந்தியை திணிப்பதாகவும், குலக்கல்வியை திணிப்பதாகவும் ஒரு சில தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படிக்க வேண்டும். அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications