மிக விரைவில் புதுச்சேரி முதல்வராகும் ரங்கசாமி.. ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்
புதுவை: துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தமிழகத்தைப் போலவே நேற்று புதுவையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கூட்டணி வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றது. அதேநேரம் சுயேச்சையாகப் போட்டியிட்டவர்கள் ஆறு இடங்களில் வெற்றி வாகை சூடினர்.
இந்நிலையில், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உரிமை கோரினார். அப்போது என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். முன்னதாக பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக.., விட்டுத்தருவாரா ரங்கசாமி - கலாட்டா ஆரம்பம்
பதவியேற்பு நாள் மற்றும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் எப்போது நேரம் கேட்கிறார்களோ அப்போது பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.