இந்தியருடன் திருமணம்.. 2 குழந்தைகள்! கணவருடன் இருக்கனும்! புதுவை முதல்வருக்கு பாக். பெண் கோரிக்கை
புதுச்சேரி: இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், இந்தியரான தனது கணவருடன் வசிக்க விரும்புவதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இரு நாடுகளுக்கு இடையேயும் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஆனால் இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா சில அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தானியர்கள் இந்தியா வர வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும், 27ம் தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். புதுவையில் இதே போன்ற பிரச்சனையை பாக். பெண் சந்தித்திருக்கிறார்.
இந்த பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு உதவ வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு அப்பெண்ணின் கணவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது கணவர், "என்னுடைய பெயர் அனிஃப் கான். என்னுடைய மனைவி ஃபவுஜியா பானு. இவர் மீது எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் எனக்கு சில முரண்பாடுகள் இருக்கிறது. வழக்கில் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து நாங்கள் விசாவை விண்ணப்பிக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி நாங்கள் இங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2022க்கு பிறகு நாங்கள் ஆன்லைன் வழியாக விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். இதற்கு முன்னர் நேரில்தான் சென்று அப்ளை செய்திருந்தோம். ஆன்லைனில் 'பிராசசில்' இருப்பதாக காட்டியது. இதனையடுத்து சிறப்பு பிரிவு அதிகாரி சண்முகம் என்பவரிடம் பேசினோம். புதிய விண்ணப்பம் போட சொல்லியிருப்பதாக கூறியிருக்கிறார்.
என்னுடைய மனைவி, எனது சொந்த தாய் மாமன் மகள்தான். இவருடைய பெற்றோர் இந்தியர்கள்தான். வேலை விஷயமாக பாகிஸ்தான் சென்றிருந்தபோது என் மனைவி அங்கே பிறந்திருக்கிறார். எனவே அவருக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு இவரை நான் திருமணம் செய்தேன். இப்போது 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனவே அன்பான முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல அவரது மனைவியும் இப்பிரச்சனைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்று பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. ஒடிசாவில் கடந்த 33 ஆண்டுகளாக வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண், உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவரது குழந்தைகளுக்கு திருமணமாகி, அவர் பேரக்குழந்தைகளையே எடுத்துவிட்டார். இது பற்றி அவர் கூறுகையில்,
"எனக்கு பாகிஸ்தானில் யாரையும் தெரியாது. போனில் கூட யாரிடமும் பேசியதில்லை. திடீரென அங்கு போக சொன்னால் எங்கே போவேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல பலரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications