கொரோனா செலவுக்கு பணம் தேவை.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு செலவினங்களுக்காக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை வரியை 1 சதவீதம் உயர்த்தியது புதுச்சேரி அரசு. வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 பைசா வரை விலை உயருகின்றது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி, போக்குவரத்து செலவினை ஈடுகட்டும் வகையில் மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது. அதற்கு மேல், மாநில அரசு மதிப்பு கூட்டு வரியாக, வாட் வரியை குறிப்பிட்ட சதவீதத்தில் விதித்து வருமானம் ஈட்டி வருகின்றன. இந்த வாட் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 21.15 சதவீதமும், டீசலுக்கு 17.15 சதவீதமும் தற்போது வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா செலவினத்திற்காக, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் இந்த நோயால் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், பொதுமக்களுக்கு முக கவசம், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றிற்காக புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு முதற்கட்ட நிதியை கூட இதுவரை வழங்கவில்லை.
மேலும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மது விற்பனை, சுற்றுலா, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித்தவிக்கின்றது. அதனால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும், டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த வரி நாளை முதல் (10.04.2020) அமலுக்கு வருகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 பைசா வரை உயர வாய்ப்புள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து வசூலாகும் நிதியை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்காக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் என நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.