தீராத தொகுதி பிரச்சனைகள்.. புதுவை முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த ஆளும் காங். எம்.எல்ஏ
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதிலிருந்தே, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் அவருக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் இலவச அரசி வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை, ஏழை குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாத ஆளும் அரசை கண்டித்து எதிர்கட்சிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமிநாராயணன் எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்;
ஆளும் காங்கிரஸ் கட்சியின் ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சர் நாராயணசாமியின் பாராளுமன்ற செயலாளராகவும் இருந்து வருபவர் லட்சுமிநாராயணன்.
இவர் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது ராஜ்பவன் தொகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு பாழடைந்த அடுக்குமாடி வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவது, கல்வேகாலேஜ் மற்றும் வ.ஊ.சி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது, வைத்திக்குப்பம் சுடுகாட்டு அருகில் பல வருடங்களாக வாழும் மக்களுக்கு பட்டா வழங்குவது, ஸ்மார்ட் சிட்டி மூலம் தொகுதிக்குட்பட்ட பணிகளை உடனடியாக தொடங்குவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பல வருடங்களாக இருந்து வருகிறது.
நமது ஆட்சி வந்த பிறகும் இந்த நிலைமை மாறவில்லை. நம்முடைய காங்கிரஸ் அரசு தங்கள் தலைமையில் இருந்தும் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் தொகுதி மக்கள் மத்தியில் அவப்பெயர் நிலவிய வருகிறது.
மேலும் இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக நான் பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம், அதிகாரிகளிடமும் பேசியும், கடிதம் அளித்தும் இது நாள் வரையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்து வருவதால், பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
ஆகவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு அதிகாரிகளை அழைத்து இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னால் இப்பிரச்சினைகளுக்கு இறுதி முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொகுதி மக்கள் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்படும் என்பதையும், நானும் தொகுதி மக்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்.
எனவே பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணனின் இந்த கடிதத்தால் ஆளும் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லட்சுமிநாராயணன் சபாநாயகர் பதவி கேட்டு கிடைக்காததால் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.