3 மணி நேரம் காத்திருந்த "தமிழிசை".. தாமதமாக வந்த ரங்கசாமி.. "நான் போறேன்".. வெட்டவெளிச்சமான மோதல்?
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையில் மோதல் நிலவி வருவதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையில் பனிப்போர் நிலவிக்கொண்டு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில்தான் முதல்வர் ரங்கசாமி நேற்று செய்த செயல் ஒன்று பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் + பாஜக இணைந்து அங்கு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் தற்போது அங்கு துணை நிலை ஆளுநர்.
பொதுவாக பாஜாக் ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் மோதல் இருக்கும். அதிலும் யூனியன் பிரதேசங்களில் மிக கடுமையான மோதல்கள் இருக்கும். யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களை துணை நிலை ஆளுநர்கள் வேலை பார்க்கவே விடுவது இல்லை என்ற புகார்கள் உள்ளன.
என் உயிரில் தமிழ் இருக்கிறது.. சிபிஎஸ்இ மூலம் அனைவருக்கும் சமமான கல்வி..நாராயணசாமிக்கு தமிழிசை பதில்
தமிழிசை
இந்த நிலையில்தான் புதுச்சேரியில் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்று ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்தார். அங்கு முதல்வரின் பணிகளை தமிழிசைதான் செய்கிறார். முதல்வருக்கு அதிகாரமே இல்லை. முதல்வர் விதிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் கேட்பதே இல்லை. அதிகாரிகள் தமிழிசை சொல்வதைத்தான் கேட்கின்றனர் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட ரங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் வெளிப்படையாக தனது மனக்குறையை ரங்கசாமி தெரிவித்தார். அதில், என்னால் புதுச்சேரியில் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.
மக்கள் அரசு
மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசால் சரியாக பணிகளை செய்ய முடியவில்லை. அதிகாரிகள் எனக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். எனக்கு போதிய அதிகாரம் இல்லாமல் இருக்கிறது. புதுச்சேரியை மாநிலமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். மாநில அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே புதுச்சேரியில் நலத்திட்டங்களை கொண்டு வர முடியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மரியாதை இல்லை. மக்கள் என்னை தேர்வு செய்து உள்ளனர். ஆனால் எனக்கு போதிய அதிகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மனஉளைச்சலாக இருக்கிறது.
நீதிமன்றம்
நீதிமன்றம் இந்த அரசு ஒரு பணியை செய்ய வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. அதை செய்ய நினைத்தால் அதிகாரிகள் செய்ய மறுக்கிறார்கள். என்னுடைய உத்தரவிற்கு மதிப்பில்லாமல் இருக்கிறது. நான் போடும் உத்தரவுகளை எப்படி எல்லாம் தடுக்க வேண்டும் வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறார்கள். எனக்கு ஆதங்கமாக இருக்கிறது என்று ரங்கசாமி குறிப்பிட்டார். ரங்கசாமியின் இந்த பேச்சு காரணமாக புதுச்சேரியில் முதல்வருக்கும் - துணை நிலை ஆளுநருக்கும் இடையில் உள்ள மோதல் வெட்ட வெளிச்சம் ஆனது. இவர்கள் மோதிக்கொள்வது உறுதியானது.
தமிழிசை
இதற்கு தமிழிசை சொன்ன பதிலில், முதலவரின் மனக்குறைகளை கேட்டு அறிவேன். நான் எந்த கோப்புகளையும் கிடப்பில் போடவில்லை. ஏதாவது தவறு இருந்தால் அதிகாரிகளை அழைத்து பேசி சரி செய்வோம். முதல்வர் என்னிடம் சிரமத்தை கூறி இருக்கலாம். எங்களுக்குள் மோதல் இல்லை. நாங்கள் அண்ணன் தங்கை போன்றவர்கள். அண்ணன் ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் கண்டிப்பாக நான் பேசுவேன். அவரின் பிரச்சனைகளை கேட்டு சரி செய்வேன், என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மோதல்
இந்த நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு நேற்று வெட்டவெளிச்சமாக வெடித்தது. நேற்று துணை நிலை ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துவம் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு தமிழிசை வந்து காத்திருந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி வர நீண்ட நேரம் எடுத்தது. ரங்கசாமி வருவதற்காக தமிழிசை காத்துக்கொண்டே இருந்தார். 3 மணி நேரம் கழித்துதான் ரங்கசாமி அந்த நிகழ்விற்கே வந்தார். ஆனாலும் தமிழிசை முகத்தில் எந்த விதமான ரியாக்சனையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடியே இருந்தார்.
என்ன நடந்தது?
ஆனால் சிடுசிடுப்பான முகத்துடன் இருந்த ரங்கசாமி .. தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டதும் டென்ஸன் ஆனார். முதலில் தமிழ் தாய் வாழ்த்துதான் இசைக்க வேண்டும். அதன்பின்தான் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடுப்பாகி கூறினார். இதையடுத்து கேக் வெட்டும் போது மட்டும் தமிழிசையுடன் சிரித்தபடி ரங்கசாமி காணப்பட்டார். கேக் வெட்டிய பின் மீண்டும் சிடுசிடுப்பாக காணப்பட்ட ரங்கசாமி அங்கே யாரிடமும் பெரிதாக எதுவும் பேசாமல் வேகமாக கிளம்பி சென்றார். நேற்று அங்கு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இவர்கள் இருவருக்கும் இடையிலான் பனிப்போர் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
தமிழிசை
புதுச்சேரியில் சட்டப்படி துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அங்கு துணை ஆளுநராக கிரண் பேடி இருந்த போது அதிகாரத்தோடு பல விஷயங்களை கட்டுப்படுத்தினர். முதல்வர் போலவே கிரண்பேடி செயல்பட்டார். தற்போது அங்கு என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. தற்போது துணை ஆளுநர் தமிழிசைக்கு பாஜக கூட்டணி ஆட்சி காரணமாக எளிதாக முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்த நிலையில்தான் தனக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று என். ஆர் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமி கருதுவதாக கூறப்படுகிறது. அந்த கோபத்தைதான் நேற்று இவர் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தி உள்ளார் என்கிறார்கள்.