நேரடியாக வங்கி கணக்கிலேயே வந்து விழும் ரூ.5000.. புதுச்சேரி அரசு அறிவிப்பு! 2 நாட்களில் குட் நியூஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை நிவாரணம் ரூ.5,000, மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 48 செ.மீ அளவிற்கு மழை பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்த மக்கள் மீட்பு படைகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் புதுச்சேரியில் 4 பேர் உயிரிழந்தனர்.
புயலுக்குப் பிறகு புதுச்சேரி தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்தார். அதன்படி நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி பலியான மாட்டிற்கு ரூ.40,000, கன்றுக் குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். அதேபோல விளை நிலத்தில் பயிர்கள் சேதமடைந்தவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
சாலைகள், பாலங்கள் என உட்கட்டமைப்பு சேதத்துக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி மத்திய அரசிடம் கேட்டு புதுச்சேரி தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்தியக் குழு வந்து பார்வையிட்டுள்ள நிலையில், அவர்களிடம் நிதி கேட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் வெள்ள நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புயல் வெள்ள நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூபாய் 5000 நிவாரணத்தை அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. 3 லட்சத்து 54 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications