வருகிறது 2020.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி.. தயாராகும் விருந்துகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் 2020 புத்தாண்டை வரவேற்பதற்காக புதுச்சேரி அரசு மற்றும் ஓட்டல்கள் மது விருந்துடன் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகை தருவார்கள்.
புத்தாண்டிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து புத்தாண்டு வரை புதுச்சேரியில் தங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் ஆரோவில், கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதி பூங்கா, தாவரவியல், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி என பல்வேறு சுற்றுலா தலங்களில் தற்போதிலிருந்தே சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் காண முடிகிறது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை, மது விருந்து, பல்சுவை விருந்து உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையும், தனியார் ஓட்டுல் நிர்வாகங்களும் ஏற்பாடு செய்து வருகின்றன. கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், நடுத்தர ஹோட்டல்கள், கடற்கரை ரிசாா்ட்கள் என 300 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சுற்றுலாப் பயணிகள் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்துவிடுவா். இந்தாண்டும் நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் தற்போது 90 சதவீத அறைகள் முன் பதிவாகியுள்ளன.
புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் எவ்வித சிரமுமின்றி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடற்கரை சாலையில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 5 பறக்கும் கேமராக்கள் மூலமும் சுற்றுலாத்தலங்கள் கண்காணிக்கப்பட உள்ளது.