மாண்டோஸ் புயலை எதிர்கொள்ளும் புதுச்சேரி..அரசு ஊழியர்களுக்கு நோ லீவு..முதல்வர் ரங்கசாமி அதிரடி
புதுச்சேரி: புயல் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டோஸ் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் விடுப்பு எதுவும் எடுக்கக்கூடாது எனவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நவம்பர் மாதம் தொடர்ந்து சில நாள் பெய்த மழையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இது சற்று ஆறுதலைக் கொடுத்தாலும், வழக்கமான வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. கடந்த 10 நாட்களாக குறைந்திருந்த மழை இந்த வாரம் மீண்டும் வேகமெடுக்க உள்ளது.
மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு அருகே எங்கே இருக்கிறது தெரியுமா?
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரையில் புயல் ஏதும் உருவாகி பெரிய மழை பொழிவை தமிழகத்துக்கு கொடுக்கவில்லை. இந்நிலையில் தான், தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடலுக்குள் நுழைந்த காற்று, அந்தமான் அருகே காற்றழுத்தமாக உருவானது. அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது. இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்நிலையில் சென்னையில் இருந்து 770 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் புயல்
சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும். மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. புயலாக வலுப்பெற்று நாளை காலை வடதமிழகம் - புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலை அடையும் எனவும் கூறியுள்ளது.
புயல் எங்கு கரையை கடக்கும்
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் டிசம்பர் 9 தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும். 9ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். புயல் இதுவரை உருவாகவில்லை. புயல் உருவான பின்னர் அதற்கு மாண்டோஸ் என்று பெயர் சூட்டப்படும் என்று கூறினார். புயலானது புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புதுச்சேரி ரங்கசாமி
புயல் முன்னெச்சரிக்கை குறித்து அரசு அதிகாரிகளிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு 3 பேரிடர் மீட்பு குழு வருகிறது. இதில் 2 குழு புதுச்சேரியிலும், ஒரு குழு காரைக்காலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். மீன்பிடிக்கச் சென்ற 454 விசைப்படகுகள் உட்பட 2353 படகுகள் கரைசேர்ந்து விட்டன.
என்னென்ன ஏற்பாடுகள்
புதுச்சேரி மாவட்டத்தில் 163 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி எண்கள் 1070, 1077 முழுவதும் செயல்படும். முக்கியமான துறைகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறந்துள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், மருந்துடன் 24 மணி நேரமும் செயல்படும். குடிநீர் தொட்டிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
லீவு எடுக்கக் கூடாது
கனமழையில் தடையற்ற குடிநீர் வசதி செய்ய ஜெனரேட்டர் வசதியும் தயாராக உள்ளது. கனமழையால் நீர் தேங்கும் இடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதை மீறி நீர் தேங்கினால் வெளியேற்ற ஜெனரேட்டர், ஜேசிபி தயாராக உள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்ற ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளோம். மின் கம்பி, கம்பம் விழுந்தால் உடன் சரி செய்ய குழு தயாராக உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கனமழையை எதிர்கொள்ள தயாராக அரசு உள்ளது. நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. அங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உணவு சமைத்து வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார். புயல் மழையை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் மக்கள் பணி செய்ய எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.