“அப்டேட்” ஆன ஆர்எஸ்எஸ்.. டவுசருக்கு பதில் “காக்கி பேண்ட்” - புதுச்சேரி அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள்
புதுச்சேரி: அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்தநாளான இன்று புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தீ வைத்து கொளுத்துவோம்.. 50 இடங்களில் பேரணிக்கான நோக்கம் என்ன.. சீமான் ஆவேசம்!
வி.சி.க பேரணி
இதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக நல்லிணக்க பேரணியை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு மதசார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர், இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. நாளுக்கு நாள் திருமாவளவனின் பேரணிக்கான ஆதரவு பெருகி வந்தது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை, பெட்ரோல் குண்டுவீச்சு உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊரவலகத்துக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்தது.
புதுச்சேரி
இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 11 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியது. அதே நேரம் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போட்டியாக புதுச்சேரியில் இன்று காலை மதசார்பற்ற கட்சிகள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
மனித சங்கிலி
இதனை தொடர்ந்து இன்று காலை திமுக தலைமையில் மதநல்லிணக்க மனித சங்கிலி புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
இந்த நிலையில் மாலை அரசு அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் புதுச்சேரியில் நடைபெற்றது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல வயதுக்கு உட்பட்டோர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி அணிந்து அணிவகுப்பு ஊர்வலகம் சென்றனர். இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.