சபாஷ் புதுச்சேரி போலீஸ்... பொதுமக்களுக்கு இலவச கராத்தே பயிற்சி!
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், விழிப்புணர்வோடு இருக்கவும், புதுச்சேரி காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தற்போது புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே செயற்கையாக உருவாக்கப்பட்ட கடற்கரை மணற்பரப்பில் கோடை விடுமுறையையொட்டி, காவல் துறை சார்பில் கைதேர்ந்த காவல் துறை அதிகாரிகளை கொண்டு 10 நாட்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்படு வருகிறது.
10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலை மாலை என இருவேளைகளில் கராத்தே, அக்கிடோ, குவாஷ் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
காவல்துறையினர் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இதுபோல இலவசமாக கராத்தே பயிற்சி கற்றுத் தருவது பொதுமக்களிடையே, குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.