என்ன ரிசார்ட்டா? புதுச்சேரி அரசியலில் களேபரம்.. ரங்கசாமியின் "மிட் நைட்" திட்டம்.. சிக்கலில் பாஜக!
புதுச்சேரி: புதுச்சேரி யில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் அங்கு முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2-3 மாதமாகவே புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு இருந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக ஆட்சி சரியாக தேர்தலுக்கு முன் கவிழ்ந்தது. இதுவே பாஜக வகுத்த ஆப்ரேஷன் கமலா மூலம்தான் நடந்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக, என். ஆர் காங்கிரசில் சேர்ந்ததால் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன்பின் புதுச்சேரியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

சிக்கல்
அப்போது தொடங்கிய அரசியல் குழப்பம் இன்னும் முடியவில்லை. என்.ஆர் காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. ரங்கசாமிக்கு முதல்வர் பதவியை கொடுப்பதாக கூறி, பாஜக அங்கு கூட்டணி வைத்தது. ஆனால் இந்த கூட்டணி உருவான போதே ரங்கசாமி, கடைசி வரை பாஜக கூட்டணியில் நீடிப்பாரா, தேர்தலுக்கு பின் கூட்டணியில் இருப்பாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

பாஜக வெற்றி
ஏனென்றால் ரங்கசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள புதுவையில் திமுகவும் தயாராகவே இருந்தது. கடைசியில் 30 தொகுதிகளில் 16 இடங்களை பெற்று பாஜகவுடன் சேர்ந்து ரங்கசாமியின் என். ஆர் காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது வந்துள்ள தேர்தல் முடிவுகளில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுது.

திமுக
திமுக காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் வென்றுள்ளது. இதில் 6ல் திமுக வென்றுள்ளது. சுயேட்சை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் தற்போது புதுச்சேரியில் ரங்கசாமியை முதல்வராக ஏற்க பாஜக மறுப்பதாக தகவல்கள் வருகிறது.

பாஜக திட்டம்
ரங்கசாமியை முதல்வராக ஏற்க முடியாது, எங்கள் எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. பாஜக 6 இடங்களில் மட்டுமே வென்றாலும் முதல்வர் பதவி வேண்டும் என்பதில் பிடிவதாக இருக்கிறது. ஆனால் ரங்கசாமியோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கண்டிப்பாக முதல்வர் சீட்டை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்ற முடிவில் இருக்கிறார்.

மீட்டிங்
நேற்று இரவே இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் இரவோடு இரவாக ரங்கசாமி சுயேட்சை எம்எல்ஏக்கள் 6 பேரிடமும் பேசி உள்ளார். என். ஆர் காங்கிரசுக்கு ஆதரவு தர முடியுமா என்று பேசி உள்ளார். அதோடு திமுக பக்கமும் இவர் தூது அனுப்பி இருப்பதாக தகவல்கள் வருகிறது. நேற்று இரவு முழுக்க இதற்காக பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது.

இல்லை
இன்று இந்த பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு பக்கமும் தூதுகள் பறந்து கொண்டு இருக்கின்றன. பாஜகவோ தொடர்ந்து எப்படியாவது முதல்வர் சீட்டை பெறலாம் என்று பிடிவாதமாக உள்ளது. இதனால் புதுவையில் ஒருவேளை ரிசார்ட் அரசியல் தலை தூக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications