ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம்.. மல்லாடி வேதனை!
புதுச்சேரி: ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி மாநிலத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் ஆவர். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவை கண்டறியும் பி.சி.ஆர். ஆய்வகங்கள் நாடு முழுவதும் எத்தனை உள்ளது.. ஹைகோர்ட்
புதுச்சேரியில் இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 515 குடும்பங்களுக்கு வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளன. 3,155 பேருக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,097 பேருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 46 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது.
இதுவரை 41 நாட்கள் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனர். ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த தளர்வினால் பல பிரச்சனைகள் சுகாாதரத்துறைக்கு வரும் என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே நான் தெரிவித்திருந்தேன்.
நேற்று கூட இந்த பிரச்சனை குறித்து முதல்வரிடம் கூறினேன். புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகம், ஆந்திரா, கேரளா பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை அதிகளவில் உள்ளது. குறிப்பாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 86 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 39 நாட்களில் 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் மொத்தமாக 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் தொற்று அதிகரிக்கின்ற வாய்ப்புள்ளது.
இன்று காலை 5 மணி முதல் கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு காய்கறி சரக்கு வாகனங்களில் வந்தவர்கள் 40 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 70 பேர் மொத்தம் 110 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கு சில கட்டுப்பாடுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளது.
இது தொடர்ந்தால் பச்சை மண்டலமாக மாறுவது கடினம். எனவே கொரோனாவை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.