அச்சச்சோ... ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை... கலைக்கப்படும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி!
புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வரும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பிரசாரம் களை கட்டி இருக்கிறது.

புதுவை காங். ஆட்சி கலைப்பு?
முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக அடுத்தடுத்து இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உள்ளது.

பாஜகவுக்கு தாவும் காங். எம்.எல்.ஏ.க்கள்
ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் ஏற்கனவே பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். தற்போது ராஜினாமா செய்துள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமாரும் பாஜக பக்கம் தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் நாளை புதுவை வருகை
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். புதுச்சேரியில் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ராகுல் காந்தி நாளை சந்தித்து பேச இருக்கிறார்.

காங். நிர்வாகிகள் அதிர்ச்சி
புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications