"வாவ்".. ஏழை பெண்ணுக்கு தடபுடலாக "வளைகாப்பு".. அசத்திய சாலையோர வியாபாரிகள்.. புதுவையில் நெகிழ்ச்சி
புதுச்சேரி: ஏழை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சாலையோர வியாபாரிகள் சேர்ந்து தடபுடலாக வளைகாப்பு நடத்திய சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
9 வகை சீர்வரிசைகள், 9 வகையான சாதங்கள், மேடை அலங்காரங்கள் என இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அசத்தலாக நடைபெற்றது.
ஆதரவு இல்லாத அந்தப் பெண்ணுக்கு தாமாக முன்வந்து வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காதல் திருமணம்
டெல்லியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவ்வாறு பூக்கள் வாங்க செல்லும் போது, லாஸ்பேட்டையை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும், கணேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. கணேஷுக்கு பெற்றோர் உறவினர்கள் என யாரும் இல்லை என்பதால் பவித்ராவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பெற்றோருக்கு தெரியாமல் கணேஷை ஓராண்டுக்கு முன்பு பவித்ரா திருமணம் செய்து கொண்டார்.
ஏழ்மையிலும் மகிழ்ச்சி
இந்த திருமணத்திற்கு பிறகு பவித்ராவை அவர்களின் பெற்றோரும், உறவினர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கணேஷும், பவித்ராவும் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தனர். குடிசையில் ஏழ்மையில் வாழ்ந்தாலும் இருவரும் மகிழ்ச்சியாகவே குடும்பத்தை நடத்தினர். இந்த சூழலில், பவித்ரா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு 9 மாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
வளைகாப்பு
இந்நிலையில், யாருடைய ஆதரவும் இல்லாததாலும், ஏழ்மை நிலையில் இருப்பதாலும் பவித்ராவுக்கு வளைகாப்பு நடத்த கணேஷால் முடியவில்லை. அதை பற்றி அவர்கள் சிந்திக்க கூட இல்லை. ஆனால், பவித்ராவுக்கு தனக்கு வளைகாப்பு நடத்த யாரும் இல்லையே என்ற ஏக்கம் கொஞ்சம் இருந்தது. அவர் வெளிப்படயாக சொல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்து சாலையோர வியாபாரிகள் பவித்ராவின் எண்ணத்தை புரிந்துகொண்டனர். இதையடுத்து, சாலையோர வியாபாரிகளே பவித்ரா, கணேஷுக்கு தெரியாமல் வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
9 வகை சீர்வரிசை
அதன்படி, அங்குள்ள மண்டபத்தில் இரவோடு இரவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த வியாபாரிகள், எதுவும் கூறாமல் கணேஷையும், பவித்ராவையும் அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஏதோ நிகழ்ச்சிக்கு பூ அலங்காரம் செய்யதான் தங்களை அழைத்து வந்திருக்கிறார்கள் என அவர்கள் நினைத்தனர். பின்னர் சாலையோர வியாபாரிகள் விஷயத்தை கூற, அவர்களின் அன்பால் நெகிழ்ந்து இருவரும் கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து, பவித்ராவுக்கு புதிய சேலை அணிவித்து மேடையில் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து, பெண்ணிற்கு தாய் வீட்டில் இருந்து என்னென்ன சீதனங்கள் செய்வார்களோ அந்த சீதனங்களான பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் 9 வகை சாதங்களுடன் பவித்ராவுக்கு வளைகாப்பை சக வியாபாரிகள் செய்து வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.