புதுச்சேரிக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு.. மாணவர்கள் ஹேப்பி
புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுதலை தின கொண்டாட்டம், கல்லறை திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி விடுதலைப்பெற்றன. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் விடுதலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் கொண்டாடப்பட இருக்கிறது. அதன்படி நாளை காலை புதுச்சேரி கடற்கரையில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதேபோல கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் கல்லறை திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும். இன்றைய தினம் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகளில் பூக்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். எனவே இதற்கும் சேர்த்து இரண்டு நாட்களுக்கு புதுச்சேரியில் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications