"தமிழிசைக்கு நாவடக்கம் தேவை" புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது.. நாராயணசாமி பரபர!
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நாவடக்கம் தேவை என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
தொடர்ந்து மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு வெளியிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்.28ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து மின்வாரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்.. துணை ராணுவப் படை வருகிறது.. தமிழிசை கடைசி வார்னிங்!
நாராயணசாமி பேட்டி
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலம் கடந்த சில தினங்களாக கலவர பூமியாக மாறியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் விட்டுள்ளதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து கேட்கப்படவில்லை
மின்துறை தனியார்மயம் செய்யப்படுவதால் எந்த பலனும் புதுச்சேரிக்கு இல்லை. இந்தியாவில் மிகக்குறைந்த மின்சார கட்டணம் புதுச்சேரியில் தான் கொடுத்து வந்தோம். மின்துறை தனியார் மயம் விவகாரத்தில் பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும் இதுவரை கருத்து கேட்காமல் தன்னிச்சையாக உத்தரவு போட்டுள்ளனர்.
அவசர நிலை
இதனால் புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் நிலவி வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது புதுச்சேரியில் துணை ராணுவத்தை இறக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், முதலமைச்சருக்கு தெரியாமலே இந்த தனியார் மயத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஜக மீது விமர்சனம்
தொடர்ந்து, மின்துறையை தனியாரிடம் விற்றுவிட்டதால் மகாரஷ்டிரா போல் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.18க்கு விற்கும் நிலை ஏற்படும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இதை மத்திய பாஜக அரசு இதனை கொண்டுவரவில்லை. தமிழகத்தில் தனியார் மயம் கொண்டுவர முயன்றபோது அதனை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்த்ததால் அந்த முடிவு நிறுத்தப்பட்டது.
நீதிமன்றம் செல்லத் தயார்
தனியார் மயமானாலும் தற்போது வழங்கப்படும் விலைக்கே மின்சாரம் கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், மின்சார வாரியம் தனியார்மயம் செய்யப்படுவதை உறுதியாக நாங்கள் எதிர்ப்போம் என்றும், இதற்காக நீதிமன்றம் செல்ல கூட தயார் என்று தெரிவித்தார்.
நாவடக்கம் தேவை
மேலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு நாவடக்கம் தேவை. அவர் பாஜகவின் ஏஜெண்டாகவே செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி மாநிலத்தை பற்றி கவலை இல்லாத கூட்டணியாகவும், மக்களை வஞ்சிக்கும் கூட்டணியாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது என்று விமர்சித்தார்.