“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், "காங்கிரஸ் கடைபிடிக்கும் அணுகுமுறை, ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பையும் சிதைக்கிறது" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
வழக்கமாக புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டிற்கும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில்தான் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை தேர்தல் தேதி மாற்றப்பட்டிருகிகிறது. இந்நிலையில், கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு விஷயத்தில் இழுபறி இப்போது வரை நீடித்து வருகிறது.

கூட்டணியில் குழப்பம்
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்தது. ஆனால், புதுச்சேரியில் நிலைமை அப்படியே தலைக்கீழாக இருக்கிறது. இங்கு, கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. இருப்பினும் தொகுதி பங்கீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதால், கூட்டணியிலிருந்து சிபிஎம் கழன்றுக்கொண்டது.
விட்டுக்கொடுக்காத காங்கிரஸ்
மறுபுறம் திமுக, விசிக மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருக்கின்றன. திமுவுக்கு தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஏராளமான சலசலப்புகள் எழுந்தன. வேட்புமனு தாக்கல் தொடங்கிய பின்னரும் கூட இந்த பிரச்சனை ஓயவில்லை. இப்படி இருக்கையில், தற்போது விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காங்கிரஸ் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திருமாவளவன் டென்ஷன்
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து 'உழவர்கரை தொகுதியை' திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது.
விசிக-காங்கிரஸ் மோதல்
அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி
வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான தாக்கல் வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்துவரும் பாஜக கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு வேட்பாளர்களுக்குப் கேட்டுக்கொள்கிறோம்."
வேட்பாளர்கள்
ஊசுடு :
பெ.அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன்
நெட்டப்பாக்கம் :
ப.அமுதவன்
உழவர்கரை
செல்வ.புஷ்பலதா
என திருமாவளவன் அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் குறித்து திருமாவளவன் வெளிப்படையாக இப்படி பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications