மோடியின் 9 ஆண்டு சாதனை இதுதான்! பட்டியலிட்ட எல் முருகன்! துணை கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு-பரபரப்பு
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனைகளை இன்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் பட்டியலிட்டார். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக இருந்தவர் எல் முருகன். இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாகவும், மத்திய இணையமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் மத்திய இணையமைச்சராக எல் முருகன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அவர் புதுச்சேரியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் இந்தியா படைத்த சாதனைகள் குறித்து பட்டியலிட்டார். இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியதாவது:

கடந்த 2004ல் இருந்து 2014 வரை இந்தியா பின்தங்கி இருந்தது. 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி என தினந்தோறும் ஊழல்கள் பற்றிய செய்திகள் வந்தன. இதற்கிடையே தான் பிரதமராக மோடி கடந்த 2014ல் பொறுப்பேற்றார். இவரது தலைமயில் கடந்த 9 ஆண்டுகளில் இந்த நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைத்திருக்கின்றது. அனைத்து வீடுகளுக்கும் கழிவறை, மகளிருக்கு மலிவு விலையில் சானிட்டரி பேடு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் தேசிய அளவில் 4 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் 220 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ரூ.100க்கு திட்டம் போட்டால் ரூ.15 தான் மக்களுக்கு சென்று சேர்கிறது என்றார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் ரூ.100க்கு திட்டம் போட்டால் ரூ.100ம் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது.
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6000 கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். உஜ்வாலா திட்டத்தின்கீழ் இந்தியாவில் 9 கோடியே 58 லட்சம் பேருக்கு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பின் போது தமிழின் கலாசாரம் முன்னிலைப்படுத்தப்பட்டது, தமிழர்கள் அனைவருக்குமான கவுரவமாகும். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் என நாடெங்கும் தமிழின் பெருமையை பிரதமர் நரேந்திரமோடி எடுத்துரைத்துள்ளார்.
பிரதமரின் செயல்பாட்டால் வரும் 2047ல் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்ததாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் தற்போது பாஜக அரசு மீது குறைகாணமுடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவது தொடங்கியது. பாஜக ஆட்சியில் இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பை பெற்றுள்ளளனர். இந்தியாவில் அதிகளவில் தொழில் முனைவோர் உருவாகி உள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலகளவில் பிரதமர் மோடியின் புகழ் உயர்ந்துள்ளது'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்க முயன்றனர். அப்போது அவர் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மாறாக சாதனைகளை விளக்கத்தான் வந்தேன். பிற கேள்விகளுக்கு பதிலளிக்க வரவில்லை என புறப்பட்டு சென்றார். இது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications