கோவில் நில விற்பனை மோசடி.. பாஜக எம்எல்ஏவுக்கு சிக்கல்.. அதிரடி காட்டிய ஹைகோர்ட்
புதுச்சேரி: கோவில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசில் எம்எல்ஏவாக இருந்தவர் ஜான்குமார். இவர் காங்கிரஸ் கட்சி கடந்த 2021ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதன்பிறகே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு நடந்தசட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. இதில் ஜான் குமார் பாஜக சார்பில் எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் ஜான்குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி, புதுச்சேரியைச் சேர்ந்த வி.வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசந்தர் இந்த நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய சட்டன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் எனக்கூறி விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications