வேங்கைவயல் விவகாரம்.. யூகங்கள் அடிப்படையில் குற்றவாளியை பிடிக்க முடியாது.. சிபிசிஐடி சொன்ன தகவல்!
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக யூகங்கள் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது என்று சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தெரிவித்துள்ளார். குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 45 பேரிடம் தனித்தனியாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அனைத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள், தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.
ட்விஸ்ட்.. முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை? “சிபிசிஐடி விசாரணை”- டிஜிபியிடம் புகார் அளித்த தம்பி மனைவி!
குற்றவாளிகள் யார்?
இதுதொடா்பாக வெள்ளனூா் காவல் நிலையத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏடிஎஸ்பி தலைமையில் 2 டிஎஸ்பி-க்கள், 4 காவல் ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 11 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இருப்பினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனிடையே காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளியாக்க முயற்சிப்பதாகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு டிஜிபி சைலேந்திரபாபு கடந்த ஜன. 14ம் தேதி உத்தரவிட்டாா்.
திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், அனைத்து சமூக மக்களிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
சிபிசிஐடி
சிபிசிஐடி இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிசிஐடி டிஸ்பி பால்பாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 45 பேரிடம் சிபிசிஐடி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. யூகங்கள் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. குடிநீரில் மலம் கலந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.