இந்த போலீஸால கஸ்தூரியைத்தான் கைது செய்ய முடியும்! செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியாது! எச்.ராஜா
புதுக்கோட்டை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியாத போலீஸாரால் நடிகை கஸ்தூரியை மட்டும் கைது செய்ய முடியும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜாவிடம், நடிகை கஸ்தூரி கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு உரிய பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்தும் வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை தமிழக போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை, ஆனால் கஸ்தூரியை மட்டும் அவர்களால் கைது செய்ய முடிகிறது. திமுக அரசாங்கத்தில் ஒரு துறை கூட சிறப்பாக செயல்படவில்லை என எச்.ராஜா விமர்சித்திருந்தார்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ 62 கோடியை பெற்றதாக அதிமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதில் பல்வேறு ரெய்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த மோசடியில் பெரும்பாலான பங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு இருப்பது தெரியவந்தது. மேலும் கரூரில் அவர் பிரம்மாண்ட பங்களா கட்டி வந்தார். அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அதை அவர் பெறாமல் தலைமறைவாகிவிட்டார்.
கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும் இதுவரை எந்த அவர் குறித்து எந்த தகவலும் இல்லை. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பல முறை ரத்தான போதுகூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை காரணம் காட்டியே ஜாமீன் கொடுக் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. அவரும் பழையபடி மின்சாரத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனாலும் அசோக்குமார் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அவரை போலீஸார் தேடி வருவதாக சொல்லப்பட்டாலும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில்தான் தெலுங்கு பேசும் மக்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் கொச்சையாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து அவர் கைதாவது உறுதியானது.
அவரது இருப்பிடத்தை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில்தான் அவர் ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஹரியின் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.
ஆனால் கஸ்தூரி திறக்கவில்லை. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என போலீஸார் எச்சரித்ததும் கஸ்தூரி கதவை திறந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தயாரிப்பாளர் ஹரியின் செல்போனில் இருந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு கஸ்தூரி போன் செய்தாராம். அதை வைத்துதான் தனிப்படை போலீஸ், அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்தது.
இதையடுத்து அவரை சாலை மார்க்கமாக சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். அவர் காரில் இருந்து இறங்கும் போதே எந்த டென்ஷனும் இல்லாமல் சிரித்தபடியே இறங்கினார். நீல நிற சுடிதார், பிங்க் நிற பேண்ட், சிவப்பு துப்பட்டா அணிந்து கொண்டிருந்தார். அவரை பெண் போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும். பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அங்கு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுவார். அதன்பேரில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications